சந்திரயான் லேண்டருடன் தொடர்பை இழந்ததும் என்ன சொன்னார் சிவன்? விஞ்ஞானிகள் அறையில் நடந்தது இதுதான்!
Recommended Video
பெங்களூர்: திக், திக் நிமிடங்களுக்கு நடுவே, விக்ரம் லேண்டர் விஞ்ஞானிகளுடனான தொடர்பை இழந்துள்ளது. நிலவில் தரையிறங்க, இதோ 2 கிலோமீட்டர் தூரம்தான் என இஸ்ரோ தனது கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களுக்கு அறிவிப்பு வெளியிட்ட சில நிமிடங்களில், லேண்டருடனான தகவல் தொடர்பை விஞ்ஞானிகள் இழந்தனர்.
பெரிய வெற்றி செய்திக்காக தேசம் காத்திருந்தபோது, கட்டுப்பாட்டு அறையில் காணப்பட்ட விஞ்ஞானிகளின் பதட்டமான முகங்கள் நாட்டு மக்களுக்கு, நிலவில் என்ன நடந்தது என்பதை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
இருப்பினும், நாடு முழுக்க கண் விழித்து காத்திருந்த பெரும்பாலான மக்களுக்கு என்ன நடந்தது என்பது அப்போது புரியவில்லை.
ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும்.. உங்கள் பணி வீணாகாது.. இஸ்ரோவுக்கு ராகுல் காந்தி மெசேஜ்
சிவன் பேச்சு
சோர்வடைந்த முகத்தோடு அதிகாலை 2.16 மணிக்கு, விஞ்ஞானிகள் குழுவினருக்கு நடுவே வருகை தந்தார், இஸ்ரோ தலைவர் சிவன். "விக்ரம் லேண்டரின் தரையிறக்கம் திட்டமிட்டபடி இருந்தது. சாதாரணமாகவே சென்றது. நிலவிலிருந்து, 2.1 கி.மீ உயரத்தில் லேண்டர் சென்றபோது, லேண்டரிலிருந்து தரை கட்டுப்பாட்டு மையத்திற்கான தகவல் தொடர்பை இழந்தது. இதுதொடர்பான டேட்டா ஆய்வு செய்யப்படுகிறது," என்று கனத்த குரலில் சொன்னார் இஸ்ரோ தலைவர், சிவன்.
வெளியேறிய மோடி
அப்போது, பொறுமையிழந்தவராக காணப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி. எதையோ, யோசித்தவராய், தான் அமர்ந்தருந்த மாடத்திலிருந்து மோடி எழுந்து நின்றார். அப்போது இஸ்ரோ தலைவர் சிவன் உட்பட விஞ்ஞானிகள் குழு, பிரதமர் மோடியை, நோக்கி, நடந்து செல்வதைக் காண முடிந்தது. பிரதமர் அவர்களிடம் ஏதோ கூறி, தலையசைத்தார். இதன்பிறகு அந்த இடத்தை விட்டு வெளியேறி கீழே நடக்க ஆரம்பித்தார். இதையடுத்து, சக விஞ்ஞானிகள், தங்கள் குழு தலைவர் சிவனிடம் ஆறுதலாக பேசிக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.
நம்பிக்கையளித்த மோடி
பிரதமர் மோடி, இஸ்ரோ மையத்திலிருந்து வெளியேறும்முன்பாக, இஸ்ரோ தலைவர் சிவன் முதுகில் தட்டிக் கொடுத்தார். சூழ்ந்து நின்ற விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார். "வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் உள்ளன. அப்படித்தான் இதுவும். நீங்கள் செய்துள்ளது சிறிய சாதனை அல்ல. தேசம் உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறது. சிறந்த நம்பிக்கையளித்துள்ளீர்கள். நான் உங்களை வாழ்த்துகிறேன். நீங்கள் அனைவரும் இந்த நாடு, அறிவியல் மற்றும் மனிதகுலத்திற்கு ஒரு பெரிய சேவையைச் செய்துள்ளீர்கள். நான் உங்களுடன் எல்லா வழிகளிலும் துணையாக இருக்கிறேன், தைரியமாக முன்னேறுங்கள்" என்று கம்பீரமாக மோடி சொன்னபோது, அங்கே குழுமியிருந்த விஞ்ஞானிகள் முகங்களில் கவலை மறந்து ஒரு நம்பிக்கை கீற்று மின்னி மறைந்ததை பார்க்க முடிந்தது.
காங்கிரஸ் ஆதரவு
இதன்பிறகு, காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ட்வீட்டில், "இந்த பதட்டமான காலகட்டத்தில், மொத்த நாடும் இஸ்ரோ குழுவினருக்கு துணை நிற்கிறது. உங்கள் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் நம் தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளது. ஜெய் ஹிந்த்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட்டில், சந்திரயான் 2 நிலவு மிஷனின் நம்பமுடியாத சிறந்த பணிக்கு இஸ்ரோ குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் ஆர்வமும் அர்ப்பணிப்பும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும். உங்கள் பணி வீணாகாது. இது இன்னும் பல லட்சிய இந்திய விண்வெளி பயணங்களுக்கு அடித்தளம் அமைத்து கொடுக்கும், என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.