கர்நாடகாவில் அடுத்து என்ன நடக்கும்? புதிய திட்டம் போடும் அமித் ஷா.. டெல்லி செல்லும் எடியூரப்பா!
கர்நாடகாவில் அரசு கவிழ்ந்துள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா இன்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை சந்திக்க டெல்லி செல்ல உள்ளார்.
பெங்களூர்: கர்நாடகாவில் அரசு கவிழ்ந்துள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா இன்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை சந்திக்க டெல்லி செல்ல உள்ளார்.
பல கட்ட திருப்பங்கள், கால தாமதங்களுக்கு அடுத்து நேற்று கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதையடுத்து 11 மாதங்களாக நீடித்த காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நேற்று முடிவிற்கு வந்தது.
குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத அரசு கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்து உள்ளது. ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியை தழுவி உள்ளது.
வாய்ப்புள்ளது
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த நிலையில் கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து குமாரசாமி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதையடுத்து எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளார் என்கிறார்கள். இன்று அவர் ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்திக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
என்ன வாய்ப்பு
இதனால் விரைவில் முதல்வராக எடியூரப்பா பொறுப்பு ஏற்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில்தான் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை இன்று எடியூரப்பா சந்திக்க உள்ளார். இதனால் இன்று மதியம் அவசரமாக எடியூரப்பா டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன காரணம்
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோர வேண்டுமா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டுமா என்ற குழப்பம் பாஜக கட்சிக்குள் நிலவி வருகிறது. தற்போது கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மை பெற 105 இடங்கள் தேவை. பாஜகவிற்கு சரியாக 105 இடங்கள் இருப்பதால் ஆட்சி அமைக்கலாமா, இல்லை தேர்தலை சந்திக்கலாமா என்று குழப்பம் உள்ளது.
அமித் ஷா பிளான்
இந்த நிலையில்தான் அமித் ஷா எடியூரப்பாவை சந்திக்க அழைத்துள்ளார். இதில் பெரும்பாலும் எடியூரப்பாவை அமித் ஷா ஆட்சி அமைக்கவே சொல்வார் என்று கூறுகிறார்கள். இப்போது ஆட்சி அமைக்க சொல்லிவிட்டு, ஆறு மாதங்களுக்கு பின் இடைத்தேர்தலை சந்திக்கலாம் என்று அமித் ஷா ஆலோசனை வழங்க வாய்ப்பு உள்ளது.
தகுதி நீக்கம்
16 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை என்றாலும் கூட, கொறடாவின் விப் உத்தரவை மீறியதால் அவர்கள் எல்லோரும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். இதனால் எப்படியும் 16 தொகுதிகளுக்கு இன்னும் 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 10+ இடங்களில் வென்று பாஜக ஆட்சியை தொடர திட்டமிடும்.