ரொம்ப ஓவரா இருக்கு உங்க போராட்டம்.. பொறுமை இழந்தா கோத்ராதான்.. பாஜக அமைச்சர் பகிரங்க வார்னிங்
பெங்களூர்: இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் பொறுமை இழந்தால் கோத்ரா போன்ற ஒரு சம்பவம் மறுபடியும் நடைபெறும் என்று கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும் அமைச்சருமான, சி.டி.ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும், இந்திய குடியுரிமை வழங்கப்படாது என்ற அம்சம் இடம்பெற்றிருப்பதை எதிர்த்து நாடு முழுக்க தீவிரமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கர்நாடகாவில், பெங்களூர், மங்களூர், குல்பர்கா போன்ற பல்வேறு நகரங்களிலும் அனைத்து மதப் பிரிவு மக்களும் இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக தீவிரமாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
2 பேர் மீது துப்பாக்கி சூடு
அதேநேரம் போராட்டம் வன்முறை பாதைக்கு திரும்புவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா எச்சரித்துள்ளார். வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மங்களூரில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
சிடி ரவி கோபம்
இந்த பிரச்சனைகளுக்கு நிறைவே மங்களூரை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மாநில அமைச்சருமான யு.டி.காதர் அளித்த பேட்டியில், குடியுரிமை சட்ட திருத்தத்தை கர்நாடகாவில் அமல்படுத்த எடியூரப்பா முயற்சி செய்து வருகிறார். இவ்வாறு சட்டத்தை அமல்படுத்தினால் கர்நாடக மாநிலம் பெரும் கொந்தளிப்புக்கு உள்ளாகும் என்று எச்சரித்தார். இதற்கு பதிலடியாக மாநில சுற்றுலாத் துறை அமைச்சரான சிடி ரவி அளித்த பேட்டியில் கூறியதை பாருங்கள்:
|
ரயிலுக்கு தீ வைப்பு
இதுபோன்ற வன்முறை மனநிலையில் உள்ளவர்கள்தான் கோத்ரா ரயிலுக்கு தீ வைத்தவர்கள், இது போன்ற மனநிலையில் இருந்தவர்கள்தான் கரசேவகர்கள் மீது தீ வைத்தவர்கள். இதற்கு பதிலடி ஆரம்பித்தால் என்ன ஆகும் என்பதையும் இவர்கள் ஏற்கனவே பார்த்து உள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன்.
கோத்ரா சம்பவம்
கோத்ராவில் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதும், அதற்கெதிராக பொதுமக்கள் ஆவேசம் காட்டியதால் என்ன மாதிரி விளைவுகள் ஏற்பட்டன என்பது அவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒருவேளை காதருக்கு, தெரியாவிட்டால் அந்த சம்பவத்தை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். பெரும்பான்மை மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்பதால் நீங்கள் எல்லா பக்கமும் தீவைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். பெரும்பான்மை மக்கள் தங்கள் பொறுமையை இழந்தால் அதற்கு பிறகு என்ன ஆகும் என்பதை நீங்கள் ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொள்ளுங்கள்.
அமைதியாக இருக்கிறோம்
நாங்கள் அமைதியாக இருப்பது எங்களது பலவீனம் கிடையாது. நீங்கள் தீ வைப்பதையும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதும் நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். மறுபடியும் கூறுகிறேன் எங்களது அமைதி பலவீனம் கிடையாது. அவ்வாறு நீங்கள் நினைத்து விட வேண்டாம். இவ்வாறு சிடி ரவி தெரிவித்துள்ளார். கோத்ராவில் நடந்த மதக் கலவரத்துக்கு அமைச்சர் ஒருவரே வக்காலத்து வாங்கி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.