மருத்துவமனையிலிருந்து சசிகலா ஜன.31ல் டிஸ்சார்ஜ்.. உடனே சென்னை கிளம்ப மாட்டார்.. பெங்களூரில் 'ஸ்டே!'
பெங்களூர்: பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்து சசிகலா ஞாயிற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவனை டீன் ஜெயந்தி அறிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா உடல்நலக் குறைவு காரணமாக ஜனவரி 20-ஆம் தேதி பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
முதலில், பவுரிங் அரசு மருத்துவமனையிலும், பிறகு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
கொரோனா குணமடைந்தது
முதலில் ஆக்சிஜன் உதவியுடன் ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு உடல் நலம் தேறியது என்று மருத்துவமனை அறிவித்தது. மூன்று தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று முழுமையாக குணமடைந்து விட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. இருப்பினும் அவர் தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவமனை முடிவு
இந்த நிலையில் சசிகலா எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது பற்றி விக்டோரியா மருத்துவமனை சனிக்கிழமை மாலை முடிவு எடுக்க உள்ளது என காலையில் செய்தி வெளியானது. அதே போல மாலையில் விக்டோரியா டீன் ஜெயந்தி வெளியிட்ட அறிக்கையில், சசிகலா 31ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற ரேப்பிட் கொரோனா பரிசோதனையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. ஆர்டிபிசிஆர் முறையில் கொரோனா பரிசோதனை நடந்த நிலையில், அதன் முடிவுகள், இரவு வெளியாக உள்ளது.
தண்டனை முடிந்தது
தண்டனை காலம் முடிந்து ஜனவரி 27-ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார். இதற்கான ஆவணங்களை சிறைத்துறை அதிகாரிகள் விக்டோரியா மருத்துவமனைக்கு நேரில் சென்று சசிகலாவிடம் கொடுத்து, கையெழுத்து பெற்று சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரில் தங்கும் சசிகலா
சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும், நேரே சென்னை செல்லவில்லை. ஏனெனில், டிஸ்சார்ஜ் செய்த பிறகு சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள சசிகலாவுக்கு மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து பெங்களூரில் 2 இடங்களில் சசிகலா தங்க வீடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஏதாவது ஒரு வீட்டில் சசிகலா தங்கியிருப்பார் என்றும், பிப்ரவரி 4 அல்லது 5ம் தேதி வாக்கில், கார் மூலம் சென்னை செல்வார் என்றும் அவரது உறவினர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.