மோடி கோயிலுக்கு போனா புனித பயணம்.. நாங்க போனா டெம்பிள் ரன்னா.. மீடியாக்களை விளாசிய குமாரசாமி
பெங்களூரு: அரசியல்வாதிகளை மீடியாக்கள் வேண்டுமன்றே சிறுமைப்படுத்துவதாக, கர்நாடக முதல்வர் குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மீடியாக்களை கட்டுப்படுத்தும் சட்டத்தை கொண்டு வருவதற்கான நேரம் வந்து விட்டதாகவும் அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.
பெங்களூருவில் இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த குமாரசாமி, மீடியாக்களுக்கு அரசியல்வாதிகளை கிண்டல் செய்ய யார் அதிகாரம் கொடுத்தது என கோபமாக கேட்டார். எங்களை பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கு என கேட்ட அவர், நாங்கள் கார்ட்டூன் கேரக்டர்கள் போலவா உங்களுக்கு தெரிகிறோம்,
தீவிரமான விவகாரங்களை கூட நகைச்சுவையாக காட்ட உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார். வேலைவெட்டியில்லாமல் நாங்கள் சும்மா இருப்பதாக உங்கள் நினைப்பா என அடுக்கடுக்காக ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மோடி கேதார்நாத், பத்ரிநாத் போன்ற இடங்களுக்கு சென்றால் அதனை மீடியாக்கள் புனித பயணம் என கூறுகின்றன. அதே எதிர்கட்சித் தலைவர்கள் கோயில்களுக்கு சென்றால், டெம்பிள் ரன் என்று கூறி ஏன் வீடியோ கேமை வைத்து விமர்சிக்கிறீர்கள் என காட்டமாக கேட்டார்.
கர்நாடகத்தில் ஆட்சியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசின் வாழ்நாள் குறித்து நீங்கள் தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பி வருகிறீர்கள். எங்கள் அரசு 6.5 கோடி கர்நாடக மக்களின் ஆதரவுடன் தான் அரசு செயல்படுகிறது. மீடியாக்களால் அல்ல. மீடியாக்கள் யாருக்கு சாதகமாக செயல்படுகின்றன என்பது மக்களுக்கு தெரியும்.
உங்களை பற்றியெல்லாம் எனக்கு கவலையோ, பயமோ இல்லை. ஆனால் தொடர்ந்து மீடியாக்களின் செய்திகளை பார்த்தால் துாக்கத்தை தொலைத்து விடுவேன் போல. அந்தளவிற்கு நீங்கள் அரசியல்வாதிகளை விமர்சிக்கிறீர்கள் என சாடினார்.
நான் திருடும் குடும்பத்தில் பிறக்கவில்லை.. அவர்தான் சாராயம் காய்ச்சி விற்றவர்: அமைச்சர் காச்மூச்!
மே-23க்கு பிறகு கர்நாடக அரசு நீடிக்குமா என்று சந்தேகம் மீடியாக்களுக்கு உள்ளது. அந்த சந்தேகமே உங்களுக்கு வேண்டாம், காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் சித்தராமையா நல்லாசியுடன், கர்நாடகத்தில் எங்கள் கூட்டணி அரசு தனது பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யும் என்றார்.