மெலிந்த தேகத்துடன் போலீஸாரையே அதிர வைத்த முருகன்.. ஸ்கெட்ச் போட்டால் விடமாட்டார்.. யார் இவர்?
பெங்களூர்: திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடை கொள்ளையில் தொடர்புடைய முருகனை கைது செய்த போலீஸாருக்கு அவரது மெலிந்த தேகத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பார்ப்பதற்கு வெகுளி போல் உள்ள இவரா 12 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்தார்? என்பதுதான் அந்த அதிர்ச்சியின் பின்புலம் ஆகும்.
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் கடந்த ஆண்டு அதிகாலையில் புகுந்த 2 கொள்ளையர்கள் ரூ 12 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் என தெரியவந்தது. முகத்தில் கார்ட்டூன் முகமூடிகளை அணிந்து கொண்டு போலீஸாருக்கே போக்கு காட்டிய முருகனை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு
திசை திருப்பி
கைது செய்ய சென்ற போலீஸாருக்கு அவரை பார்த்ததுமே அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம் உடல் மெலிந்த தேகத்துடன் காணப்படும் இவரா இந்த கொள்ளை சம்பவத்திற்கு மாஸ்டர் பிளான் போட்டது என்பதுதான். 44 வயதாகும் முருகன் மற்றவர்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிப்பதில் கில்லாடி ஆவார்.
பெங்களூரு
முருகன் மீது ஏராளமான கொள்ளை வழக்குகள் உள்ளன. ஒவ்வொரு கொள்ளை சம்பவத்திற்கு தனித்தனி பாணிகளை கையாளுவார். கொள்ளையடிப்பது என ஸ்கெட்ச் போட்டுவிட்டால் கொள்ளையடிக்காமல் விட மாட்டாராம். தனக்கென ஒரு கும்பலை உருவாக்கிக் கொண்டு கடந்த 2008-ஆம் ஆண்டு பெங்களூருவில் கைவரிசையை காட்ட தொடங்கினார்.
திரைப்பட தயாரிப்பாளர்
2011-ஆம் ஆண்டு பெங்களூரு போலீஸார் ஒரு கொள்ளை வழக்கில் முருகனை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது இருப்பிடத்தை ஹைதராபாத்திற்கு மாற்றினார். அங்கு சொந்தமாக வீடு வாங்கி அங்கேயே குடியேறிவிட்டார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என தெரிவித்துள்ளார்.
6 மாதங்கள் சிகிச்சை
உடல் மெலிந்திருந்தாலும் போலீஸாருக்கே சவால் விடுக்கும் கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றுவதில் முருகன் கைத்தேர்ந்தவராம். இந்த நிலையில் கொடூர நோயால் பாதிக்கப்பட்ட முருகன் கடந்த 6 மாதங்களாக பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துவிட்டார்.