பதவியேற்கும்போதெல்லாம் பச்சை கலர் சால்வை.. பின்னணியில் எடியூரப்பாவின் உருக்கமான சென்டிமென்ட்!
பெங்களூர்: கர்நாடகாவில் நான்காவது முறையாக, முதல்வராக பொறுப்பேற்ற, எடியூரப்பா பச்சை சால்வை அணிந்து பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.
பொதுவாக தமிழக அரசியல்வாதிகளுக்கும், வண்ண வண்ண சால்வைகளுக்கும் நிறைய தொடர்பு உண்டு. மறைந்த, முன்னாள் முதல்வர் கருணாநிதி, எப்போதுமே மஞ்சள் நிறத்திலான சால்வை அணிந்து காணப்படுவார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கருப்பு நிற சால்வை அணிந்து இருப்பார். இதேபோன்று, எடியூரப்பா முக்கியமான விழாக்களில், அதுவும் கண்டிப்பாக பதவியேற்று விழாக்களில் பச்சை நிற சால்வை அணிவது வழக்கம்.
பின்னணி
இதற்கு ஒரு பின்னணி உள்ளது. ஆரம்ப காலகட்டங்களில், எடியூரப்பா எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது கர்நாடகாவில் பாஜக மிகவும் பலவீனமாக இருந்தது. ஆனால் விவசாயிகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்ததின் மூலமாக வெகுஜன மக்களிடம் பிரபலமாகி கட்சியை வளர்த்தவர் எடியூரப்பா.
இதுதான் காரணம்
விவசாயிகளுக்காக எடியூரப்பா பேசினால், சட்டசபையை நடுநடுங்கும் என்ற பேச்சுவழக்கு கர்நாடகாவில் உண்டு. எனவே, எப்போதும் விவசாயிகளுக்காக, தான் முன்னுரிமை கொடுக்க கூடியவர் என்பதை காண்பிக்க பச்சை சால்வை அணிவதாக எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.
|
விவசாயிகள்
முதல் முறையாக முதல்வராக பதவியேற்ற போதும், விவசாயிகளுக்காக, நாட்டிலேயே முதல்முறையாக தனி பட்ஜெட்டை அறிமுகம் செய்தவர். தன்னை அரசியலில் உயர்த்தியது விவசாயிகளுக்கான போராட்டம்தான் என்பதை எடியூரப்பா எப்போதுமே நினைவில் வைத்திருக்கவே, பச்சை கலர் சால்வை அணிவது வழக்கம்.
இன்றும் பச்சை நிறம்
அதேநேரம், எடியூரப்பா ஆட்சி காலத்தில் ஹாவேரி நகரத்தில் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன்பிறகு விவசாயிகளிடம் எந்த அளவுக்கு எடியூரப்பாவுக்கு செல்வாக்கு இருந்ததோ, அதே அளவுக்கு செல்வாக்கு சரிவடைந்தது உண்மை. இருப்பினும், அதன்பிறகு ஓரளவுக்கு மீண்டும் விவசாயிகளிடம் நற்பெயரை ஈட்டத் தொடங்கியுள்ளார். எடியூரப்பா தனது பச்சை சால்வை சென்டிமென்டை இன்றும் தொடர்ந்தார்.