சூப்பர் டூப்பராக வகுத்த வியூகம்.. எடியூரப்பாவின் "அந்த" பிரசாரமே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்?
Recommended Video
பெங்களூர்: கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது எப்படி என்பது குறித்து அரசியல் நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
கர்நாடக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்குகள் நேற்றைய தினம் எண்ணப்பட்டது. இது கிட்டத்தட்ட எடியூரப்பா அரசுக்கு வாழ்வா சாவா போராட்டம் என்றே கூறலாம்.
தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்களின் (105 பாஜக+ஒரு சுயேச்சை) ஆதரவு இருந்தது. 5-ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில் 6 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே எடியூரப்பாவின் அரசு தப்பும்.
குழப்பங்களின் கோபுரத்தில் நிற்கிறார் முதல்வர் எடப்பாடி... ஆர்.எஸ்.பாரதி சாடல்
மஜத
இந்த நிலையில் இடைத்தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் நேற்றைய தினம் வெளியானது. இதில் பாஜக 12 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. தேவகவுடாவின் மஜதவோ ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை.
பாடம் புகட்டுங்கள்
இந்த தேர்தலில் 13 தொகுதிகளில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களையே பாஜக களமிறக்கியது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா அனைத்து தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்தார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், ஆடு, கோழி போல் விற்பனையாகிவிட்டனர். குதிரை பேரத்தில் ஈடுபட்டு சொந்த கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களுக்கு பாடம் புகட்டுங்கள் என்று தனது பிரசாரத்தில் கடும் விமர்சனம் செய்தார்.
வளர்ச்சி
இதனால் களங்கிய பாஜக மேலிட உத்தரவை அடுத்து முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் என அனைவரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். எடியூரப்பா தனது பிரசாரத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளை வளர்ச்சியில் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவோம்.
எதிர்க்கட்சி
தகுதி நீக்க எம்எல்ஏக்களை வெற்றி பெற வைத்தால் அனைவரையும் அமைச்சராக்குவோம். அதனால் அந்த தொகுதிகளின் பிரச்சினைகள் விரைவில் தீர்ந்துவிடுவோம் என தொகுதியை பற்றியே பேசினாரே ஒழிய எதிர்க்கட்சியினரை குறிவைத்து எதையும் பேசவில்லை.
அரசியல் நிபுணர்கள்
கர்நாடகத்தில் நிலையான ஆட்சி தொடர வேண்டும். இந்த மாநிலத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதை மாநில மக்கள் விரும்பவில்லை என்றும் அவர் பேசியிருந்தார். எடியூரப்பாவின் இந்த பேச்சுதான் மக்களை அவர் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
வாக்களிப்பு
மேலும் பாஜகவை போல் ஒற்றுமையாக அனைத்து நிர்வாகிகள், தலைவர்கள் என காங்கிரஸ் கட்சியில் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. சித்தராமையாவும் தினேஷ் குண்டுராவ் மட்டுமே பிரசாரம் செய்தனர். இந்த பனிப்போரினாலும் ஏற்கெனவே குமாரசாமி தலைமையிலான ஆட்சியின் போது காங்கிரஸ் கட்சிக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தினால் அவர்களில் சிலர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. இடைத்தேர்தலையே சந்தித்து வந்தால் தொகுதி எப்போதுதான் வளர்ச்சி அடையும் என ஒவ்வொரு வாக்காளர்களும் தங்கள் மனதில் கேள்வி எழுப்பிக் கொண்டே பாஜகவுக்கு மொத்தமாக வாக்களித்தனர் என கூறப்படுகிறது.
நிதர்சனம்
இந்த தோல்வியை கருத்தில் கொண்டு இனியாவது கட்சிக்குள் கட்டுக்கோப்பையும் ஒற்றுமையையும் கொண்டு சோனியா, ராகுல் காந்தி முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் பழமைவாய்ந்த காங்கிரஸ் கட்சியின் முடிவுரை விரைவில் எழுதப்பட்டுவிடும் என்பதே நிதர்சனம்.