கர்நாடக சட்டசபைக்குள் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு அமைச்சர் பதவியை தூக்கி தந்த பாஜக.. பின்னணி இதுதான்
பெங்களூர்: 2012ல் கர்நாடக சட்டசபை ஒரு மோசமான நிகழ்விற்கு சாட்சியாக மாறியது. எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடந்த கால கட்டம் அது. சட்டசபைக்குள் அப்போதைய அமைச்சர்கள், லட்சுமண் சவதி, சி.சி. பாட்டீல் மற்றும் கிருஷ்ணா பாலேமார் ஆகியோர் சட்டசபைக்குள் அமர்ந்து செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
இந்த நிகழ்வு, டிவி சேனல்கள் கேமராக்களில் சிறைபிடிக்கப்பட்டு, ஒளிபரப்பானது. இது பாஜக கட்சிக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மூவருமே பதவியை ராஜினாமா செய்ய பணிக்கப்பட்டனர்.
ஆனால், சரியாக, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களில் இருவர் - பாட்டீல் மற்றும் லட்சுமண் சவதி - மீண்டும் எடியூரப்பா அரசில் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
வியப்பு
இதில் சி.சி.பாட்டீல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. ஆனால் லட்சுமண் சவதி 2018ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோற்றவர். அமைச்சராக பலரும் க்யூவில் நிற்கும்போது, தேர்தலில் தோற்றவரும், சர்ச்சையில் சிக்கியவருமான லட்சுமண் சவதியை பாஜக மேலிடம் அமைச்சர் பதவிக்கு பரிந்துரைத்தது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆட்சி கலைப்பு
இதற்கு ஒரு காரணம் உள்ளதாம். மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக கலகம் செய்து ராஜினாமா செய்த 17 எம்.எல்.ஏ.க்களில், காங்கிரசின் ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை இப்படி மனமாற்றம் செய்ததில், சவதிக்கு முக்கிய பங்கு உள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு விஷயம், ஆபாச வீடியோ சர்ச்சையை நம்பமுடியாத துணிச்சலுடன் எதிர்கொண்டவர் சவதி. "விழிப்புணர்வு நோக்கங்களுக்காக" அந்த வீடியோவை பார்த்ததாக சவதி தெரிவித்தார்.
விழிப்புணர்வு
"மங்களூருவில் நடந்த ஒரு மோசமான பாலியல் கொடுமை பற்றி விவாதிக்க சட்டமன்றம் தயாராகி கொண்டிருந்தது. இதுபோன்ற பாலியல் பலாத்காரங்கள் எவ்வாறு நிகழ்கின்றன, எது தூண்டுகிறது, என்பதற்கான விழிப்புணர்வு வீடியோவை யாரோ ஒருவர் என்னுடன் பகிர்ந்து கொண்டார். அதைத்தான் பார்த்தேன்" என்று அவர் செய்தியாளரிடம் விளக்கம் கூறினார்.
வட கர்நாடகா தலைவர்
ஆரம்பத்தில் ஓரங்கட்டப்பட்டாலும், வட கர்நாடகாவில் தனது மக்கள் செல்வாக்கு காரணமாக கட்சியில் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக வளர்ந்துள்ளார் சவதி.
மூன்று முறை சட்டசபை உறுப்பினராக பணியாற்றியவர். கர்நாடகாவின் பெரும்பான்மை ஜாதி பிரிவான லிங்காயத்து ஜாதியை சேர்ந்தவர். பெலகாவி மாவட்டத்தில் உள்ள அதானியைச் சேர்ந்தவர் சவதி. இது மாநிலத்தின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படுகிறது. செல்வம் மற்றும் செல்வாக்கு இரண்டும் சவதிக்கு பலமாக மாறிவிட்டது.
தோல்வி
2018 சட்டமன்றத் தேர்தலில் அதானி தொகுதியில், காங்கிரசின் மகேஷ் குமட்டஹள்ளி என்பவரிடம் வெறும் 2,331 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் லட்சுமண் சவதி. 2004 ல் அரசியலில் நுழைந்த பின்னர் அவர் பெற்ற முதல் தோல்வி இதுவாகும். ஆனால் சவதி கட்சிக்காக தொடர்ந்து செய்துகொண்டிருந்த அயராத உழைப்பால் பாஜக தலைமை மனதை வென்றார், என்று கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.
எம்எல்ஏயாக வாய்ப்பு
அரசியல் பார்வையாளர் பிரகாஷ் கூறுகையில், சவதி வடக்கு கர்நாடகாவில் பெரும் செல்வாக்கைக் கொண்ட லிங்காயத்து கணிகா துணைப்பிரிவைச் சேர்ந்தவர். அவர் கடந்த 15 ஆண்டுகளாக எடியூரப்பாவுக்கு விசுவாசமாக இருந்தார். மகேஷ் குமட்டஹள்ளி, காங். கூட்டணி அரசுக்கு எதிராக திரும்பினார். எனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீண்டும் அதானி தொகுதியில் போட்டியிட மாட்டார் என தெரிகிறது. எனவே சவதி அதானி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதெல்லாம்தான் அவரை அமைச்சரவையில் சேர்க்க காரணம் என்கிறார்.