Exclusive: சசிகலா ஏன் 18 கி.மீ தூரத்திலுள்ள பவுரிங் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார்? நிறைய டவுட்
பெங்களூர்: பெங்களூர் சிறையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சசிகலா, விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல் பவுரிங் அரசு மருத்துவமனைக்கு எதற்காக அழைத்துச் செல்லப்பட்டார் என்று கேள்விகள் எழுந்துள்ளன.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், 4 வருடம் சிறை தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தார் சசிகலா. வரும் 27ம் தேதி அவர் சிறையிலிருந்து விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று திடீரென சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையிலிருந்து சிவாஜி நகர் பகுதியில் உள்ள பவுரிங் அண்ட் லேடி கர்ஸன் அரசு மருத்துவ மனைக்கு (சுருக்கமாக பவுரிங் மருத்துவமனை என்று அழைப்பார்கள்) அவர் அழைத்து செல்லப்பட்டார்.
சசிகலா டிபன் சாப்பிட்டார்.. நல்லாருக்கார்.. பௌரிங் மருத்துவமனை டீன் மனோஜ் தகவல்!
18 கி.மீ தூரத்தில் பவுரிங்
மத்திய சிறைச்சாலையில் இருந்து இந்த மருத்துவமனை சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. முதலில் சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி கொடுக்கப்பட்டு பிறகு பவுரிங் மருத்துவமனைக்கு சசிகலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அதே நேரம், விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு சசிகலா அழைத்துச் செல்லப்படாமல் பவுரிங் மருத்துவமனைக்கு ஏன் அழைத்துச் செல்லப்பட்டார் என்ற கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன.
விக்டோரியா ஏன் போகவில்லை
ஏனெனில் பவுரிங் மருத்துவமனையை விடவும் விக்டோரியா அரசு மருத்துவமனையில் வசதிகள் அதிகம். அது மட்டும் கிடையாது. சாம்ராஜ்பேட் பகுதியில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையும், சிறைச்சாலையில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கக் கூடியதுதான். எனவே பவுரிங் மற்றும் விக்டோரியா ஆகிய அரசு மருத்துவமனைகள் இடையே, சிறையிலிருந்து செல்லும் தூரத்தில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லாத நிலையில் சசிகலா பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படாதது வழக்கமான நடைமுறையை விட வித்தியாசமாக இருக்கிறது.
சிறைச்சாலை வழக்கம்
சிறைச்சாலை விதிமுறைகளின்படி, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கைதிகள் வழக்கமாக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். கர்நாடக முதல்வர் எடியூரப்பா, 2011ம் ஆண்டு, ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட போது கூட விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை
மருத்துவ வசதிகள் மற்றும் சிறை விதிகள் மற்றும் மரபு ஆகிய அனைத்து அடிப்படையில் பார்த்தாலும் சசிகலா, விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கவேண்டும். பவுரிங் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டது என்று பார்த்தால், விஐபி குற்றவாளிகள் வரிசையில் இதுதான் முதல் முறை என்று சொல்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
உயர் சிகிச்சைக்கு விக்டோரியா
இன்று காலை பவுரிங், மருத்துவமனை வெளியிட்ட தகவல்படி சிடி ஸ்கேன் எடுப்பதற்காக சசிகலா விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பவுரிங்கிலிருந்து விக்டோரியா மருத்துவமனைக்கு, சுமார் 7 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். நடுவே டிராபிக் பிரச்சினைகள் வேறு இருக்கிறது. எனவே பவுரிங் மருத்துவமனையிலிருந்து வீணாக விக்டோரியா மருத்துவமனைவரை சசிகலா ஏன் திரும்ப அலைக்கழிக்கப்படுகிறார் என்று புரியவில்லை. முதலிலேயே விக்டோரியா மருத்துவமனை சென்றிருந்தால், இந்த அலைச்சல் மிச்சமாகி இருக்கும் என்று புலம்புகிறார்கள் சசிகலா வட்டாரத்தில்.
காரணம் என்ன?
அதே நேரம் மருத்துவமனை வட்டாரங்களிடம் 'ஒன்இந்தியாதமிழ்' சார்பில் நாம் பேசியபோது, "விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா வார்டு இருக்கிறது. பவுரிங் மருத்துவமனையில் கொரோனா வார்டு கிடையாது. எனவேதான் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று சசிகலாவை பவுரிங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்" என்று தெரிவிக்கிறார்கள்.
சசிகலா தரப்பு சந்தேகம்
விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா வார்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருக்கிறது. சசிகலா மூச்சு திணறல் காரணமாக பாதிக்கப்பட்டவர். எனவே கொரோனாவாக இருக்குமோ என்பதுதான் முதல் சந்தேகமாக வந்திருக்கும். எனவே முதலில் விக்டோரியாவுக்குதானே சசிகலா அழைத்துச் செல்லப்படுவதுதானே லாஜிக்காக இருக்கும் என்று, நம்மிடம் பேசிய அவரது ஆதரவாளர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள். ஆக மொத்தத்தில், "என்னமோ நடக்கிறது.. மர்மமாக இருக்கிறது" என்ற பதில்தான், கர்நாடக வட்டாரத்தில் இருந்து நமக்கு கிடைக்க பெறுவதாக இருக்கிறது.