6 எம்எல்ஏக்கள்.. இதில்தான், எடியூரப்பா அரசின் தலைவிதி நிர்ணயம்.. தப்புமா, கவிழுமா?
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் 17 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் எடியூரப்பா அரசு தப்புமா? தொடருமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழும் வகையில், 17 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கலைந்தது. எனவே, 17 எம்எல்ஏக்களை, கடந்த ஜூலை மாதம், தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் ரமேஷ் குமார்.
அப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு
தீர்ப்பு
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில், "கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ், 17 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த உத்தரவு செல்லுபடியாகும். அதேநேரம், தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களை இந்த சட்டசபை பதவி காலம், முடிவடையும் வரை தேர்தலில் போட்டியிட கூடாது என சபாநாயகர் உத்தரவிட்டது செல்லாது. அவ்வாறு உத்தரவிட சபாநாயகர் அதிகார வரம்பில் இடமில்லை. எனவே, 17 பேரும் இடைத் தேர்தலில் போட்டியிட தடையில்லை." இவ்வாறு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
15 தொகுதிகள்
எனவே வரும் டிசம்பர் 5ம் தேதி நடைபெற உள்ள 15 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் ஏற்கனவே அதே தொகுதியில் தேர்வாகி, தகுதி நீக்கத்திற்கு உள்ளான, 15 பேரும் பாஜக சார்பில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு வகையில் தகுதி நீக்கத்திற்கு உள்ளான எம்எல்ஏக்களின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
2 தொகுதிகள்
17 தொகுதிகள் காலியாக இருந்தபோதிலும், அதில் பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் மஸ்கி ஆகிய 2 தொகுதிகளை தவிர்த்து இடைத் தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடக ஹைகோர்ட்டில் நடைபெறும் வழக்கு ஒன்றால் இவ்விரு தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவில்லை. இப்போது விஷயத்திற்கு வருவோம்.
கர்நாடக சட்டசபை பலம்
கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. அதில், 17 இடங்கள் இப்போது காலியாக உள்ளன. எனவே 207 தொகுதிகளில் பாதியான 104 தொகுதிகளுக்கும் மேல், எம்எல்ஏக்கள் பலம் இருந்தால் ஆட்சியை பிடிக்கலாம். பாஜகவிடம் 105 எம்எல்ஏக்கள் உளளனர். ஒரு சுயேச்சையும் ஆதரவு. எனவே 106 எம்எல்ஏக்களுடன் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. 15 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றால், சட்டசபை பலம் 222ஆக உயரும். அப்போது குறைந்தபட்ச பெரும்பான்மையை நிரூபிக்க 112 எம்எல்ஏக்கள் பலம் தேவை. எனவே, இடைத் தேர்தலில் பாஜக குறைந்தபட்சம் 6 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும். அதற்கும் குறைவாக வெற்றி பெற்றால், எடியூரப்பா ஆட்சி கலைவது உறுதி.