பெங்களூரில் இன்னும் 2 வாரம் ஊரடங்கை நீட்டிக்கனும்.. மாநகராட்சி பிடிவாதம்..எடியூரப்பா முடிவு என்ன?
பெங்களூர்: பெங்களூரில் ஊரடங்கை நீட்டிப்பு செய்ய பெருநகர மாநகராட்சி விரும்புகிறது. இது தொடர்பாக அரசிடம் மாநகராட்சி சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து பெங்களூரு நகரில் கடந்த 14ஆம் தேதி இரவு 8 மணி முதல் முறை ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. ஜூலை 22ம் தேதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு சுமார் 2 ஆயிரம் என்ற அளவுக்கு புதிதாக கொரோனா வைரஸ் நோயாளிகள் பதிவாகி வரும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அளவிற்கு மருத்துவ வசதி இல்லை என்பது மட்டுமின்றி, போதிய ஆம்புலன்ஸ்கள் கூட இல்லாத நிலையில்தான் பெங்களூரு இருக்கிறது.
"சிஎம்மை பாக்கணும்.. எனக்கு கொரோனா வந்திருக்கு" பதறியடித்து வந்த ஆம்புலன்ஸ்.. சங்கர் போட்ட ஸ்கெட்ச்!
மாநகராட்சி கோரிக்கை
எனவே நிலைமையைச் சமாளிப்பதற்கு கூடுதலாக ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்று பெங்களூரு மாநகராட்சி சார்பில் முதல்வர் எடியூரப்பாவின் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மேயர் கவுதம் குமார், நிருபர்களிடம் பேசுகையில் தெரிவித்து இருந்தா.ர் மக்களுக்கு இன்னும் போதிய விழிப்புணர்வும் வரவில்லை, தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க அரசு அனுமதி வழங்கும் என்று நம்புகிறேன் என்று கௌதம் குமார் தெரிவித்திருந்தார்.
2 வாரங்கள் ஊரடங்கு
இதனிடையே, பெருநகர் பெங்களூர் மாநகராட்சியின் ஆணையர் அனில்குமார் மேலும் 14 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதில் முதல்வர்தான் இறுதி கட்ட முடிவு இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்பதால் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு வேண்டாம் என்கிறார் எடியூரப்பா
அதேநேரம், முதல்வர் எடியூரப்பா ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பு செய்வதில் விருப்பமில்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. பெங்களூர் நகரில் கொரோனா தடுப்புக்காக, 7 அமைச்சர்கள், ஒரு எம்எல்ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் பெங்களூர் நகர, எம்பிக்கள், மூத்த அதிகாரிகள் ஆகியோருடன் முதல்வர் எடியூரப்பா வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
பெங்களூர் இ பாஸ்
அப்போது ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க விருப்பமில்லை என்றும், இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஊரடங்கு, கொரோனாவுக்கு தீர்வு இல்லை என்றும் எடியூரப்பா கூறினாராம். இதனால், அடுத்த கட்டமாக என்ன முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக நகரங்களுக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இ பாஸ் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது. பிற மாவட்டங்களிலிருந்து கூட பெங்களூருக்கு வாகனங்கள் செல்வதற்கு பாஸ் கொடுக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.