காங்கிரஸுக்கு 40 சீட் கூட தேறாது... தவறானால் மோடி தூக்குப் போட்டுக்கொள்வாரா? கார்கே சர்ச்சை பேச்சு!
Recommended Video
பெங்களூர்: "பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் பற்றி கூறிய கணிப்பு தவறாக அமைந்தால், அவர் தூக்கு போட்டுக் கொள்வாரா?" என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.
கர்நாடக மாநிலம், சின்சோலி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சுபாஷ் ரத்தோடுக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துக்களை பேசினார்.
பிரச்சாரத்தின்போது அவர் பேசியதாவது," நாட்டின் தலையெழுத்தையும், எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் உரிமை இங்கே அமர்ந்திருக்கும் உங்கள் கைகளில்தான் உள்ளது. ரத்தோட் சுபாஷ் மற்றும் எங்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் உரிமை உங்கள் கைகளில்தான் உள்ளதே தவிர, அது பாஜகவின் கைகளில் இல்லை.
எப்போது பார்த்தாலும், லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளைகூட பெறாது என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். இந்த கூற்றை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? 40 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி விட்டால், டெல்லி விஜய் சவுக்கில் மோடி தூக்குப் போட்டுக்கொள்வாரா? என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தனது பேச்சுக்கு கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக பாஜகவின் மூத்தத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஷோபா கரந்த்லஜே வலியுறுத்தி உள்ளார்.
"அப்பட்டமான பொய், போலி குற்றச்சாட்டுகள், சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைப்பது வெற்று காங்கிரஸுக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டது. முற்போக்காக பேச ஒன்றுமில்லை. பிரதமர் மோடியின் மீதான பேச்சுக்கு கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்," என்று ட்விட்டர் வாயிலாக கூறி இருக்கிறார்.
கடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்கள் கிடைத்தன. இந்த தேர்தலில் பாஜக 282 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், இந்த தேர்தலிலும் தனிப்பெரும்பான்மை பெறுவோம என்று பிரதமர் மோடி பேசி வருகிறார்.
மேலும், காங்கிரஸ் கட்சிக்கு சொற்ப இடங்களே கிடைக்கும் என்று தேர்தல் பிரச்சாரங்களில் கூறி வருகிறார். இந்த கருத்து காங்கிரஸ் தலைவர்களுக்கு கடும் கோபம் கொள்ள செய்துள்ளது. இதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.