ஐரோப்பிய நாடுகள் ஆரம்பிச்சாச்சு.. இந்தியாவில் மீண்டும் வருகிறதா கடும் ஊரடங்கு? மத்திய அமைச்சர் பதில்
பெங்களூர்: ஐரோப்பிய நாடுகளை போல இந்தியாவில் மீண்டும் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிலளித்துள்ளார்.
கொரோனாவின் 2வது அலை காரணமாக ஐரோப்பாவின் பல நாடுகளும் பழையபடி கடுமையான லாக்டவுனை அறிமுகம் செய்துள்ளன.
பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரூ திங்கள்கிழமை முதல் தேசிய அளவிலான கடுமையான லாக்டவுன் நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளார். அத்தியாவசியமற்ற கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
பெல்ஜியம் லாக்டவுன்
அக்டோபர் 30 வெள்ளிக்கிழமை முதல் பிரான்ஸ் மீண்டும் லாக்டவுனை அறிமுகம் செய்துள்ளது. வேலைக்குச் செல்வதற்கும் (வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாவிட்டால்), அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும், மருத்துவ உதவியை நாடுவதற்கும் அல்லது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதற்கும் மட்டுமே மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஜெர்மனி கட்டுப்பாடு
ஜெர்மனியில், நவம்பர் 2 முதல், நாடு முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. தியேட்டர்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், உணவகங்கள் மற்றும் மதுக்கடைகள் உள்ளிட்டவற்றுக்கு கட்டுப்பாடுகள் அடங்கும். அதிகபட்சம் 10 நபர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்கப்படுகிறது.
இத்தாலி நிலவரம்
அக்டோபர் 26 திங்கட்கிழமை தொடங்கிய புதிய கட்டுப்பாடுகள் இத்தாலியில் அடுத்த ஒரு மாதத்திற்கு அமலில் இருக்கும். நாடு முழுவதும் உள்ள அனைத்து பார்கள் மற்றும் உணவகங்கள் மாலை 6 மணியோடு மூடப்பட வேண்டும். ஜிம்கள், நீச்சல் குளங்கள், தியேட்டர்கள் மற்றும் தியேட்டர்கள் மூடப்பட வேண்டும், திருமணங்கள், ஞானஸ்நானம் மற்றும் இறுதி சடங்குகளுக்கான கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
ஊரடங்கு இல்லை
இந்த நிலையில், பிரகலாத் ஜோஷியிடம் நிருபர்கள் லாக்டவுன் பற்றி கேள்வி எழுப்பியபோது அவர் கூறியதாவது: கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் ஐரோப்பிய நாடுகளில் 2வது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. அதனால் நமது நாட்டில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
கர்நாடகா இடைத் தேர்தல்கள்
பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகர், தும்கூர் மாவட்டம் சிரா தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும். பாஜக வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாக காங்கிரஸ் சொல்கிறது. ஊழல் குறித்து டி.கே.சிவக்குமார் பேசுவது நகைச்சுவையாக உள்ளது. ஊழலில் சிக்கியுள்ள அவர், ஜாமீனில் வெளியே இருக்கிறார். இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறுவது உறுதி. மக்கள் பாஜகவை ஆதரிக்க தயாராக உள்ளனர். இதை முதலில் டி.கே.சிவக்குமார் புரிந்துகொள்ள வேண்டும்.
அமைச்சர் பேட்டி
பாகிஸ்தான் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறது என்று நாங்கள் சர்வதேச அளவில் எடுத்து கூறி வருகிறோம். இப்போது அவர்கள் புல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தியா வலுவான நாடு என்பது பாகிஸ்தானுக்கு தற்போது புரிந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.