பெங்களூரில் காலையிலேயே.. ஆண்களும், பெண்களும் முந்தியடித்து க்யூ.. மதுக்கடையில் இல்லை.. மேட்டரே வேற
பெங்களூர்: பெங்களூர் நகரில் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இன்று பூங்காக்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து ஆண்களும், பெண்களும் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்து பூங்காக்களுக்கு சென்று நடைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
சமீபகாலமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகரித்ததால், பெங்களூர் சிலிகான் சிட்டி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அதற்கு எப்போதுமே நிரந்தரமாக ஒரு பெயர் உண்டு. அதுதான் 'கார்டன் சிட்டி'
பெங்களூரின் எந்த ஒரு பகுதியிலும் பூங்கா என்பது இல்லாமல் இருக்காது. நகரின் இதமான தட்ப வெப்பத்திற்கு, இந்த பூங்காக்கள் ஒரு முக்கியமான காரணம். மிக நேர்த்தியாக, அங்குள்ள மரங்களும், செடிகளும் பராமரிக்கப்படுவது பெங்களூரின் சிறப்பு.
பெங்களூர், ஹைதராபாத், டெல்லியில் பஸ், ஆட்டோக்கள் இயக்கம் துவங்கியது.. பயணிகள்தான் இல்லை
காலை, மாலை
பெங்களூரு நகர மக்களின் வாழ்க்கையில் இரண்டர கலந்து போன ஒரு விஷயம்தான் இந்த பூங்காக்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பூங்காக்கள் அனைத்தும் பூட்டப்பட்டன. பராமரிப்பு பணியாளர்கள் மட்டும் சென்று வந்தனர். இந்த நிலையில்தான் இன்று முதல் மாநிலம் முழுக்க பூங்காக்களை திறப்பதற்கு அரசு உத்தரவிட்டது. காலையில் 7 மணி முதல், 9 மணி வரை.. மாலை 5 மணி முதல் 7 மணி வரை என தலா இரண்டு மணி நேரங்கள் பூங்காக்கள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
லால்பாக், கப்பன் பார்க்
இதையடுத்து, இன்று காலையிலேயே, ஆண்கள், பெண்கள், முதியவர்கள், மூதாட்டிகள் என பூங்காக்களை நோக்கி படையெடுத்தனர். அதிலும் நகரின் நுரையீரல் என்று அழைக்கப்படக்கூடிய, மிகப்பெரிய பூங்காக்களான லால்பாக் மற்றும் கப்பன் பார்க்கில் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
காய்ச்சல் பரிசோதனை
உள்ளே சென்ற ஒவ்வொருவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலமாக காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர். அனைவருக்கும் முகத்தில் முக கவசம் கட்டாயம் என்று கூறப்பட்டது. நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுடன், ஆண்கள், பெண்கள் பலரும் வந்திருந்ததை பார்க்க முடிந்தது.
பார்க் மீது அன்பு
இரண்டு மாதங்களுக்கு பிறகு, அவர்கள் ஓட்டம், நடை என்று தங்களது செல்லமான பூங்காவில் இரண்டர கலந்து மகிழ்ந்தனர். மதுக் கடை வாசல்களில் கூட்டம் முண்டியடித்ததை, நாம் பார்த்திருப்போம். ஆனால் பெங்களூரில் பூங்காக்களுக்கு முன்பாக அரை மணி நேரம் காத்திருந்து உள்ளே சென்றனர் மக்கள் என்றால், அவர்கள் எந்த அளவுக்கு பார்க்குகள் மீது பாசம் வைத்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.