புத்தாண்டு கொண்டாட்டத்தில் கணவன் கண் எதிரில் மனைவிக்கு பாலியல் சீண்டல்.. பெங்களூரில் கொடுமை
பெங்களூர்: பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, கணவரோடு இருந்த பெண் ஒருவர் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் எம்ஜிரோடு பகுதியில் நள்ளிரவில் புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆண்களும், பெண்களும் என பல ஆயிரக்கணக்கானோர் நள்ளிரவில் எம்ஜி ரோடு பகுதியில் கூடி நின்று, புத்தாண்டை வரவேற்பார்கள்.
ஆனால் சமீப காலமாக இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி காமுகர்கள், அங்கு வரும் பெண்களின் உடலில் கண்ட இடங்களையும் தொடுவது, சீண்டுவது அதிகரித்துள்ளது.
கடந்த வருடம், மற்றும் அதற்கு முந்தைய வருடம் இதேபோன்ற புகார் காவல் நிலையத்தில் பதிவான நிலையில், இந்த வருட புத்தாண்டு கொண்டாட்டத்திலும் அத்துமீறல் அரங்கேறியுள்ளது.
ஜெயநகரை சேர்ந்த கணவரும், மனைவியும், எம்ஜிரோடு பகுதிக்கு சென்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். கொண்டாட்டங்கள் நிறைவடைந்து நள்ளிரவு 1 மணியளவில், அவர்கள் அருகேயுள்ள ரிச்மண்ட் சர்க்கிள் பகுதிக்கு வந்தபோது, மூன்று குடிகாரர்கள், வழிமறித்து, அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளனர்.
தட்டிக்கேட்ட கணவரை தாக்கி, அவரின் பர்ஸ், செல்போன் போன்றவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.