பெங்களூரு ஓவைசி பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் முழக்கம் எழுப்பிய பெண்ணால் டென்ஷன்
பெங்களூர்: மஜ்லிஸ் கட்சி எம்.பி. அசாதுதீன் ஓவைசி பங்கேற்ற மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் பெண் ஒருவர் திடீரென மேடையிலேயே பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூருவில் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்ட மேடைக்கு ஓவைசி வந்த போது அமுல்யா என்ற பெண் பேச அழைக்கப்பட்டார்.
அவரோ மைக்கை பிடித்தபடி பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கங்களை எழுப்புங்கள் என கூட்டத்தினரை நோக்கி கேட்டுக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓவைசி உள்ளிட்டோர் அவரிடம் இருந்து மைக்கை பறிக்க முயற்சித்தனர்.
ஆனால் அந்த பெண்ணோ மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழங்கினார். இதனால் ஒரு கட்டத்தில் ஓவைசி கடும் டென்ஷனானார். பின்னர் போலீசார் மேடையேறி அந்த பெண்ணை கீழே இறக்க முயன்றனர்.
ஆனால் அப்பெண் மைக் இல்லாமல் பாகிஸ்தான் ஜிந்தாபாத், இந்துஸ்தான் ஜிந்தாபாத் வித்தியாசம் குறித்து பேச முயன்றார். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது. பின்னர் மேடையில் இருந்து அவர் போலீசாரால் வலுக்கட்டாயமாக கீழே இறக்கப்பட்டார்.
இதையடுத்து பேசிய ஓவைசி, நானோ என்னுடைய கட்சியினரோ அந்த பெண் எழுப்பிய முழக்கங்களை ஏற்கவில்லை. அதை நிராகரிக்கிறோம். இப்படியானவர்களை இந்த மேடைக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைத்திருக்கக் கூடாது.
#WATCH The full clip of the incident where a woman named Amulya at an anti-CAA-NRC rally in Bengaluru raised slogan of 'Pakistan zindabad' today. AIMIM Chief Asaddudin Owaisi present at rally stopped the woman from raising the slogan; He has condemned the incident. pic.twitter.com/wvzFIfbnAJ
— ANI (@ANI) February 20, 2020
இப்படி நடக்கும் என தெரிந்திருந்தால் இந்த நிகழ்ச்சிக்கே நான் வந்திருக்கவும் மாட்டேன். நாம் இந்தியாவுக்காக போராடுகிறவர்கள். நம்முடைய எதிரிநாடான பாகிஸ்தானை ஒருபோதும் நாம் ஆதரிக்கமாட்டோம். நாம் நமது இந்தியாவை பாதுகாப்போம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் குழப்பம் விளைவிப்பதற்காக அப்பெண் மேடை ஏறினாரா? என்கிற விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.