கும்மிருட்டில்.. யாருமே இல்லாத ரோட்டில்.. பெண்ணை இறக்கி விட்ட கேப் டிரைவர்.. பெங்களூரில் ஷாக்!
பெங்களூரு ஓலா கேப் டிரைவர் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்
பெங்களூரு: "கும்மிருட்டில்.. யாருமே இல்லாத நடுரோட்டில் என்னை அந்த டிரைவர் இறக்கி விட்டுட்டு போய்ட்டாரு.. நான் தண்ணி அடிச்சிருக்கேன்னு சொல்றாரு" என்ற பெண் ஒருவர் ஓலா டிரைவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த பெண்ணுக்கு வயது 32 ஆகிறது. கொழும்புவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, விடிகாலை 3 மணிக்கு பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கி உள்ளார். ஏர்போர்ட்டில் இருந்து, இந்திரா நகரில் உள்ள இவரது வீட்டுக்கு செல்ல ஓலா கேப் ஒன்றினை புக் செய்து, அதில் ஏறி கொண்டார்.
ஆனால், அந்த கேப் வழக்கமான பெல்லாரி நெடுஞ்சாலையில் செல்லாமல் வேற ரூட்டில் சென்றிருக்கிறது. அது பேகூர் சாலை என கூறப்படுகிறது. அது மிகவும் அபாயகரமான சாலை. பெண்களுக்குப் பாதுகாப்பற்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், டிரைவரிடம் இதை பற்றி கேட்டதற்கு, எல்லாம் மேப்-படிதான் வண்டி போகுது என்று சொல்லி உள்ளார்.
செருப்பு, சேரை வீசி.. வயதான தம்பதியிடம் சிக்கி தெறித்து ஓடினார்களே 2 திருடர்கள்.. இருவரும் சிக்கினர்
இதனால் இன்னும் பதட்டம் அடைந்த அந்த பெண், ஓலா செல்போன் ஆஃப்-ல் இருந்த எமர்ஜென்சி பட்டனை அமுக்கியுள்ளார். உடனே அந்த டிரைவர், "பெண் போதையில் இருக்கிறார். தண்ணி அடித்துள்ளார். மேப் காட்டுற வழியில போக என்னை விடாமல் தடுக்கிறார்" என தனது சூப்பர்வைசரிடம் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக காருக்குள்ளேயே வாக்குவாதமும் நடந்தது. ஒரு கட்டத்தில் அந்த டிரைவர் காரை நிறுத்தி, யாருமே இல்லாத ஒரு கும்மிருட்டு பகுதியில் பெண்ணை இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டார். அப்போது மணி விடிகாலை 3.30 மணி. அந்த நேரத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல், தன்னுடன் ஃபிளைட்டில் வந்த ஒரு நண்பருக்கு போன் செய்து, இருக்கும் இடத்துக்கு கேப்-புடன் வரச்சொல்லி, அதன்பின்னர் வீட்டிற்கு கிளம்பி சென்றுள்ளார்.
இதுகுறித்து ஓலா நிறுவனத்திடம் புகார் சொல்லியும் இதுவரை சரியான பதில் இல்லை என்கிறார் அந்த பெண். இதை பற்றி போலீசிலும் புகார் செய்திருக்கிறாராம். இதனால் ஓலா நிறுவனரின் பெயரை இணைத்து புகாரை பெண் ட்வீட் செய்துள்ளார். இதன்பின்னர், ஓலா நிறுவனம், அந்த டிரைவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.