11 ஆண்டுகளில் 4-வது முறை முதல்வரான எடியூரப்பா.. இப்பவாச்சும் ஆட்சி காலத்தை நிறைவு செய்வாரா?
பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வராக 4-வது முறையாக எடியூரப்பா இன்று மாலை பதவியேற்றார். கடந்த காலங்களைப் போல இல்லாமல், இந்த முறையாவது எஞ்சிய ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்வாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடக அரசியலில் ராசியில்லா ராஜாக்கள் ஏராளம். நாடு விடுதலை அடைந்தது முதல் இதுவரை 3 முதல்வர்கள் மட்டும்தான் முழுமையாக 5 ஆண்டுகாலம் ஆட்சி செய்துள்ளனர். மற்றவர்கள் சொற்ப காலத்தில் முதல்வர் நாற்காலியை பறிகொடுத்தவர்கள்.
அதுவும் தற்போது 4வது முறையாக முதல்வராகியிருக்கும் எடியூரப்பாவின் பதவி காலங்கள் பெரும் நகைப்புக்குரியவை. 2004-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜேடிஎஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. அப்போது இரு கட்சிகளும் 20 மாதங்கள் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வது என ஒப்பந்தம் போடப்பட்டது.
முதல்வர் நாற்காலியில் 7 நாட்கள்
முதல்வராக 20 மாதங்கள் பதவி வகித்த பிறகு குமாரசாமி ராஜினாமா செய்தார். ஆனால் பாஜகவின் எடியூரப்பா முதல்வராக ஆதரவு தர மறுத்துவிட்டார். இதனால் அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர் 2007-ம் ஆண்டு நவம்பர் 12-ந் தேதி எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஜேடிஎஸ் ஆதரவு தந்தது. ஆனால் 7 நாட்களிலேயே எடியூரப்பாவுக்கான ஆதரவை ஜேடிஎஸ் திரும்பப் பெற்றது. இதனால் எடியூரப்பா அரசு கவிழ்ந்தது. மொத்தமே 7 நாட்கள்தான் முதல்வராக எடியூரப்பா அந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
வேட்டு வைத்த லோக் ஆயுக்தா
2008-ம் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் எடியூரப்பா. 3 ஆண்டுகள் 66 நாட்கள் அந்த பதவியில் இருந்த எடியூரப்பாவுக்கு லோக் ஆயுக்தா வடிவில் சோதனை வந்தது. சுரங்கமுறைகேட்டில் சிக்கியதால் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.
கண்ணீர் மல்க ராஜினாமா
கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக அதிக இடங்களைப் பெற்றது. ஆனால் காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இடங்களைப் பெற்றது. இருந்த போதும் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் எடியூரப்பாவை முதல்வராக்கினார் ஆளுநர். இந்த விவகாரத்தில் தலையிட்ட உச்சநீதிமன்றம் 24 மணிநேரத்தில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. தம்மால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என தெரிந்ததால் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த 6-வது நாளே பதவியை கண்ணீர் மல்க ராஜினாமா செய்தார்.
மீண்டும் முதல்வராக எடியூரப்பா
இந்த முறையும் குமாரசாமி அரசை கவிழ்த்து போராடி முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ளார் எடியூரப்பா. இந்த அரசும் நிலைக்காது என குமாரசாமி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மத்திய பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் வளைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இம்முறையும் எடியூரப்பா முதல்வர் நாற்காலியை தக்க வைப்பாரா என்கிற விவாதம் கர்நாடக அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ்.
இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்து ஒவ்வொரு படிநிலையாக பாஜகவில் இடம்பிடித்தவர் எடியூரப்பா. அவசரநிலை காலத்தின் போது பெல்லாரி, சிமோகா சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார் எடியூரப்பா. 1988-ல் கர்நாடகா பாஜக தலைவரானார் எடியூரப்பா. 1983-ம் ஆண்டு முதல் 6 முறை சிகாரிபுரா தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எடியூரப்பா. 1994-ல் கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரானார். 1999-ல் கர்நாடகா சட்ட மேலவை உறுப்பினரானார் எடியூரப்பா. 2004-ல் மீண்டும் கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரானார். தற்போது 11 ஆண்டுகளில் 4-வது முறையாக முதல்வராகி இருக்கிறார் எடியூரப்பா.