நான் அப்படியா பேசினேன்.. இல்லவே இல்லை.. அந்தர்பல்டி அடித்த எடியூரப்பா
தாக்குதல் குறித்த தன் கருத்துக்கு எடியூரப்பா ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு: பல்டின்னா பல்டி இது அந்தர் பல்டியை விட மோசமாக இருக்கிறது. "நானா.. நோ.. நோ.. அப்படியெல்லாம் சொல்லவே இல்லை" என்று பாகிஸ்தானை தாக்கியதால் பாஜகவுக்கு 22 சீட் கிடைக்கும் என்று பேசி விட்டு இப்போது அதை மறுத்து ஒரே போடாக போட்டுள்ளார் எடியூரப்பா!
இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தால் நாடு முழுக்க பரபரப்பு தொற்றிக் கொண்டும், எந்த நேரம் என்ன ஆகுமோ என்ற கவலையும் நிலவி வருகிறது.
இதில் நம் நாட்டு பைலட், பாகிஸ்தான் வசம் சிக்கியிருப்பது நாட்டு மக்களை அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது. ஆனால் இது எல்லாவற்றையும் விட்டுவிட்டு, எல்லை போர் விவகாரங்களை பாஜக அரசியலாக்க ஆரம்பித்துள்ளது.
ஆரூடம்
பாஜக தலைவர்கள் இந்த கோணத்தில்தான் இப்போது பேசி வருகிறார்கள். அதிலும் எடியூரப்பா, ஒரு படிமேல போய் பாலகோட் தாக்குதலால் வரப்போகிற தேர்தலில் கர்நாடகாவில் 22 தொகுதிகளில் பாஜக ஜெயிக்க போகிறது என்று ஆரூடமே சொல்லிவிட்டார்.
வீரர்களின் ரத்தம்
எடியூரப்பாவின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்தன. இதுதான் பாஜகவின் நிறம். இதற்காகத்தான் இவர்கள் தாக்குதல் நடத்தினார்களா என்று கடும் கண்டனம் வெடித்துள்ளது. ட்விட்டரில் நெட்டிசன்கள் கண்டமேனிக்கு திட்ட ஆரம்பித்தனர். வீரர்களின் ரத்தத்தில் தேர்தல் லாபம் பார்க்கலாமா? என்று கேள்வி மேல் கேள்வியாக துளைத்தெடுத்தனர்.
|
குமாரசாமி
கர்நாடக முதல்வர் குமாரசாமியும் எடியூரப்பாவை கடுமையாக விமர்சித்திருந்தார். இப்படி எதிர்ப்புகள் கூடி வருவதை கண்ட எடியூரப்பா திடீரென்று தன் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து அப்படியெல்லாம் நான் சொல்லவே இல்லை என்று பிளேட்டை மாற்றி போட்டுள்ளார்.
|
விளக்கம்
இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் தெரிவித்த கருத்து தவறாக வெளியிடப்பட்டுள்ளது. "நிலைமை பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறது"என்றுதான் சொன்னேன். அதுவும் 2 மாதங்களுக்கு முன்பு சொன்னேன். கர்நாடகாவில் மோடி தலைமையில் பாஜக 22 இடங்களை வெல்லும் என்று நான் இப்போது முதன்முறையாக சொல்லவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
நியாயமா?
ஆனால் எப்படி பார்த்தாலும் "நிலைமை பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறது" என்றாலும் சரி, "பாஜக வரும் தேர்தலில் வெற்றி பெற போகிறது" என்றாலும் எல்லாமே ஒரே கருத்துதானே? 22 இடங்களை பாஜக வெல்லும் என்பதை முதன்முறையாக சொல்லவில்லை என்பது சரி, ஆனால் இந்த சமயத்தில் அதுவும் இந்திய வீரரின் உயிருக்காகவும், அவரது நலனுக்காகவும் பாரதமே பிரார்த்தித்து வரும் வேளையில் அதைப் பற்றிக் கவலையே படாமல் பேசியிருப்பது நியாயமா என்பதுதான் நெட்டிசன்களின் கேள்வியாக இருக்கிறது.