விபரீத ராஜயோகமாம்.. எடியூரப்பா முதல்வர் ஆவது உறுதியாம்..ஜோதிடர் கணிப்பால் தொடர்கிறது குதிரை பேரம்..!
Recommended Video
பெங்களூரு: பெரும்பான்மையை நிரூபித்து கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா விரைவில் பதவியேற்பார் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளதால், குதிரை பேரம் தொடர்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களை பிடித்தும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் முதல்வர் நாற்காலியில் அமர படாதபாடு பட்டு வரும் பிஎஸ் எடியூரப்பா ஜாதகத்தில் உள்ள யோகங்களால் மீண்டும் முதல்வராக பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக அவரது நம்பிக்கைகுரிய ஜோதிடர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் பாஜக முயற்சியை தொடர்ந்து வருகிறது.
காங்கிரஸ் ஆதரவு
கர்நாடகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களைப் பெற்ற தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் உரிமை கோரியது. இதனையடுத்து, இதனால், அவசர அவசரமாக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். அதே சமயம் 78 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சி, மஜத கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து, ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது. இதனால், மெஜாரிட்டியை நிரூப்பிக்க முடியாமல் 3 நாளில் எடியூரப்பா ஆட்சி கவிழ்ந்தது.
ஆபரேஷன் தாமரை
மெஜாரிட்டிக்கு தேவையான 112 எம்எல்ஏக்களின் ஆதரவை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு ஆட்சியை இழந்தாலும் கூட மீண்டும் ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை எடியூரப்பா தொடர்ந்து எடுத்து வருகிறார். கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்கள் சரியாக பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது, ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் இரண்டு சுயேட்சை எம்எல்ஏக்களை முதல்கட்டமாக தன்வசம் இழுத்துள்ளார்.
பாஜக எம்.எல்.ஏ.க்கள் முகாம்
ஆனால் அதிரடியாக குமாரசாமி தரப்பு பாஜக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க களம் குதித்ததாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக டெல்லி மற்றும் அரியானாவில் உள்ள ஓட்டல்களில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் முகாமிட்டிருந்தனர். இந்லையில், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதுபோன்று எதுவும் நடைபெறவில்லை.
யாகம் வளர்ப்பு
கடந்த மே மாதம் கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதற்கு முன், உடுப்பி மாவட்டத்தில் உள்ள குத்யாரு அனெக்குந்தி மடத்தில் அவரது குடும்பத்தினர் 3 நாட்கள் சிறப்பு யாகம் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், அப்போது, சந்திரகிரகணம் என்பதால், எடியூரப்பாவிற்கு தீமையை ஏற்படுத்தும். அரசியல் தோல்வி கிடைக்கும், பெயருக்கு களங்கம் ஏற்படும் என ஜோதிடர்கள் தெரிவித்ததாக கூறப்பட்டது.
ஜோதிடர்கள் கணிப்பு
எடியூரப்பாவிற்கு இப்போது சந்திர தசை நடக்கிறது. சூரிய தசை நடந்த போது கடந்த 2007ஆம் ஆண்டு 7 நாட்கள் முதல்வரானார். அதன்பின்னர் 3 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். தற்போது எட்டாம் அதிபதியாக உள்ள சந்திரன் 12ல் மறைந்து உள்ளார். விபரீத ராஜயோகத்தின் படி அவர் முதல்வர் நாற்காலியில் விரைவில் பதவியேற்பார் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இதனால், பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பா, எம் எல் ஏக்களை இழுக்க வேட்டையை தொடர்ந்து வருகிறார். இதில் வெற்றி பெறுவாரா? இல்லை தோல்வியை தழுவுவாரா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.