எம்எல்ஏக்களை கடத்திய எடியூரப்பா.. போலீசில் பரபர புகார்
பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நால்வரை எடியூரப்பா கடத்திவிட்டதாக பெங்களூர் போலீசில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்காமல் 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மட்டும் டிமிக்கி கொடுத்து வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் வழக்கறிஞர் ஆர்.எல்.என்.மூர்த்தி என்பவர் பெங்களூர் காவல்துறைக்கு இ-மெயில் மூலம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில், பாஜக தலைவர் எடியூரப்பா, பாஜக மல்லேஸ்வரம் தொகுதி எம்எல்ஏ அஸ்வத்நாராயணன் மற்றும் சிலர், காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தி கண்காணாத இடத்தில் மறைத்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மூர்த்தி கூறுகையில், ஓட்டு போட்டவன் என்ற உரிமை அடிப்படையில், எம்எல்ஏக்களை காணவில்லை என்ற அக்கறையில் இந்த புகாரை பதிவு செய்துள்ளேன் என்றார்.
இந்த புகார் சம்பவம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.