குமாரசாமி மட்டுமல்ல.. எடியூரப்பாவும் முதல்வர் பதவியில் முழுமையாக நீடித்தது இல்லையே!
Recommended Video
பெங்களூரு: கர்நாடகா அரசியலில் எந்த பதவியுமே நிரந்தரமானது அல்ல என்பதை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த குமாரசாமி மட்டுமல்ல... முதல்வராக பதவி ஏற்க இருக்கும் எடியூரப்பாவும் கூட நிரூபித்தவர்கள்தான்.
கர்நாடகாவில் 2006-ம் ஆண்டு ஜேடிஎஸ்-பாஜக கூட்டணி அரசு அமைந்தது. அப்போது இரு கட்சிகளுக்கு இடையே முதல் 20 மாதம் ஜேடிஎஸ்-க்கு முதல்வர் பதவி; அடுத்த 20 மாதங்கள் பாஜகவுக்கு முதல்வர் பதவி என ஒப்பந்த போடப்பட்டது.
இதனடிப்படையில் 20 மாதங்கள் குமாரசாமி முதல்வராக இருந்தார். அதன் பின்னர் திடீரென பாஜகவுக்கு ஆதரவு தர குமாரசாமி மறுத்தார். இதனால் 2007-ல் கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
கர்நாடகாவில் அடுத்து என்ன நடக்கும்? புதிய திட்டம் போடும் அமித் ஷா.. டெல்லி செல்லும் எடியூரப்பா!
எடியூரப்பா 7 நாள் முதல்வர்
ஜேடிஎஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் எடியூரப்பா 2007-ம் ஆண்டு நவம்பர் 12-ந் தேதி முதல்வராக பதவி ஏற்றார். முதல்வர் நாற்காலியில் அவர் உட்கார்ந்து ஒருவாரம்தான் ஆனது. திடீரென ஜேடிஎஸ் கட்சி பாஜகவுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் முதல்வர் பதவியை இழந்தார் எடியூரப்பா.
3 ஆண்டுகால முதல்வர்
2008-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொண்டது கர்நாடகா. அப்போது பாஜக அமோக வெற்றி பெற்றது. பெரும்பான்மை பலத்துடன் தென்னகத்தில் முதலாவது ஆட்சியை கர்நாடகாவில் அமைத்தது பாஜக. முதல்வராக எடியூரப்பாக 2-வது முறை பதவி ஏற்றார். ஆனால் சுரங்க முறைகேடு விவகாரத்தில் எடியூரப்பா மீது லோக் ஆயுக்தா குற்றம்சாட்டியது. இதையடுத்து எடியூரப்பாவை பதவி விலக பாஜக மேலிடம் உத்தரவிட்டது. இதனால் 2011-ல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. 2-வது முறை முதல்வர் பதவி வகித்தும் 3 ஆண்டுகள்தான் எடியூரப்பா அந்த நாற்காலியில் உட்கார முடிந்தது.
மீண்டும் முதல்வர் வேட்பாளர்
பின்னர் பாஜகவை விட்டு வெளியேறி கர்நாடகா ஜனதா பக்ஷா கட்சியை எடியூரப்பா தொடங்கி அது போணியாகாமல் 2014-ல் பாஜகவிலேயே மீண்டும் இணைத்தார். 2016-ல் கர்நாடகா மாநில பாஜக தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்ட அவர் 2018 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.
இரண்டரை நாள் முதல்வர் எடியூரப்பா
|இத்தேர்தலில் பாஜக 104 இடங்களைப் பெற்றது. ஆனால் பெரும்பான்மையை பெறவில்லை. இருப்பினும் ஆளுநர் வஜூபாய் வாலா, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தார். இதை ஏற்று எடியூரப்பா கடந்த ஆண்டு மே 17-ல் முதல்வரானார். இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிட்டு 24 மணிநேரத்தில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. இதனடிப்படையில் பதவியேற்ற 2 நாட்களிலேயே எடியூரப்பா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னரே தாம் ராஜினாமா செய்வதாக கண்ணீர்மல்க அறிவித்தார். 3-வது முறை முதல்வராகியும் இரண்டரை நாட்கள்தான் எடியூரப்பா அந்த நாற்காலியில் அமர்ந்தார்.
எடியூரப்பா மீண்டும் முதல்வர்
தற்போது மீண்டும் எடியூரப்பா முதல்வராகிறார். எடியூரப்பா 2023 வரை முதல்வர் நாற்காலியில் நீடித்தாலும் கூட மூன்றரை ஆண்டுகள்தான் அப்பதவியில் நீடித்தவராக இருப்பார்.
எடியூரப்பாவுக்கும் முதல்வர் நாற்காலிக்கும் அப்படி ஒரு ராசி!