சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை அரசியலாக்கும் பாஜக.. 22 எம்.பி சீட் கிடைக்கும் என்கிறார் எடியூரப்பா!
தாக்குதல் காரணமாக 22 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு: இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு செல்வாக்கு அதிகரித்துவிட்டதாகவும், அலை வீசி வருவதாகவும் கர்நாடகத்தில் 22 எம்பி சீட் கிடைக்கும் என்றும் பேசியுள்ளார் கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான எடியூரப்பா. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்படின்னா எதிர்க்கட்சிகள் சொல்றது எல்லாம் உண்மைதானே? புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கக்கூடாது என்று சொல்லி கொண்டிருந்தால், அதையேதான் செய்து வருகிறது பாஜக.
விமான படை தாக்குதலால் நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறதாக கர்நாடக பாஜக மாநில தலைவர் எடியூரப்பா சொல்லி இருக்கிறார்.
போர் மூளும் அபாயம்
புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் உயிரிழந்துவிட்டனர். இது சம்பந்தமான எதிர்தாக்குதலை இந்தியா நடத்த, அதற்கு பதிலுக்கு பாகிஸ்தான் இந்திய எல்லையில் களமிறங்க, நேற்று இரு நாடுகளுமே பதற்றமாகி போர் மூளும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.
22 தொகுதிகள்
இந்த நிலையில் கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சொன்னதாவது: "பாலகோட் (பாகிஸ்தான்) பகுதியில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலால் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 22 தொகுதிகள் பாஜகவுக்கு கிடைக்கும்.
[Read more: மோடி பக்தி இருக்க வேண்டியதுதான்.. ஆனால் ராஜேந்திர பாலாஜியின் ரவுத்திரம் ரொம்ப பயங்கரமா இருக்கே! ]
மோடி அலை
பாலகோட் தாக்குதலால் நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவான அலையே வீசுகிறது. இது மக்களவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். மீண்டும் மோடி பிரதமராக வெற்றி பெற இது வழிவகுக்கும்" என்றார்.
அதிர்ச்சி
இந்திய விமானி ஒருவரை பாகிஸ்தான் கைது செய்துள்ள நிலையில், எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே புரியாமல், இந்த நேரத்திலும் பாஜக தலைவர்கள் லோக்சபா தேர்தலில் ஜெயிக்க இது உதவும் என்று பேசியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.