விஸ்வரூபம் எடுக்கும் எடியூரப்பா 'சிடி' விவகாரம் - பிளாக்மெயில் ஜனதா கட்சி என விமர்சனம்
கர்நாடகா: முதல்வர் எடியூரப்பா சிடி விவகாரத்தின் உண்மைத் தன்மை குறித்து விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக, கர்நாடக அரசியல் வட்டாரங்களில் புயலை கிளப்பி வரும் விவகாரம் முதலமைச்சர் பி எஸ் எடியூரப்பா குறித்தான 'சிடி' விவகாரம் தான். குறிப்பாக ஜனவரி 13ம் தேதி எடியூரப்பா தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்த பிறகு, சிடி மேட்டர் விவாதம் உச்சத்தை எட்டியுள்ளது.
காரணம், வெளிக்கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்தவர்களுக்கே அமைச்சரவையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று எடியூரப்பாவின் ஆதரவாளர்களே கொந்தளிப்பில் இருப்பது தான்.
சிடியில் உள்ள காட்சிகளின் உண்மைத்தன்மை குறித்து இதுவரை எந்த ஒரு ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை.
சி.டி. பற்றிய விவாதம் முதல் முறையாக 2020 நவம்பரில் பொதுத் தளத்திற்கு வெளிவந்த பிறகு, முதல்வர் எடியூரப்பாவின் நெருங்கிய உறவினரும், முதல்வரின் அரசியல் செயலாளருமான என் ஆர் சந்தோஷ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பிறகு, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் பேசிய போது, "எனக்கு கிடைத்த தகவலின்படி, நான் கேள்விப்பட்ட விஷயம் என்னவென்றால், ஒரு ரகசிய வீடியோவை முதலமைச்சரின் அரசியல் செயலாளர் சந்தோஷ், எம்.எல்.ஏ ஒருவருக்கும் அமைச்சர் ஒருவருக்கும் கொடுத்திருக்கிறார். இது பின்னர் பாஜக உயர் மட்டக் குழுவுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.
இதன்பிறகு, அந்த எம்.எல்.ஏ.வும், அமைச்சரும் முதல்வர் எடியூரப்பா மற்றும் சில தலைவர்களையும் மிரட்டியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே இந்த மிரட்டல் படலம் நடந்து வந்திருக்கிறது. முதல்வரின் அரசியல் செயலாளரின் தற்கொலை முயற்சி அவ்வளவு லேசான பிரச்சனை அல்ல. இது முறையாக விசாரிக்கப்பட வேண்டும். குறிப்பாக மாநில அரசால் இது விசாரிக்கப்படக் கூடாது" என்றார்.
சிவகுமாரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, முடிந்தால் காங்கிரஸ் இதுகுறித்த ஆதாரங்களை வழங்க முடியுமா? என்று சவால் விடுத்துள்ளார்.
இருப்பினும், சந்தோஷ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனபிறகு, அவர் மீண்டும் தற்கொலைக்கு ஏதும் முயற்சிக்கவில்லை, ஆனால் தவறான மருந்தை உட்கொண்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதுகுறித்து பேசிய சந்தோஷ், "தவறான மருந்தை உட்கொண்ட பிறகு எனக்கு மயக்கம் ஏற்பட்டது. பிறகு என் குடும்பத்தார் தான் என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர். நான் தற்கொலை செய்ய எந்த காரணமும் இல்லை, அரசியல் அழுத்தமும் இல்லை" என்றார்.
இந்நிலையில், அமைச்சரவையில் பதவி கிடைக்காத எம்.எல்.ஏ பசவராஜ் பாட்டீல் யட்னல் சிடி குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்ப்பினார்.
இதுகுறித்து பேசிய யட்னல், "தன்னை பிளாக்மெயில் செய்தவர்களை அமைச்சராக்க முதலமைச்சர் முக்கியத்துவம் அளித்துள்ளார். அவர்களில் ஒருவர் அரசியல் செயலாளர், இருவர் அமைச்சர்கள். கடந்த மூன்று மாதங்களில், மூவரும் எடியூரப்பாவின் சில சிடி பதிவுகளை அவரை அச்சுறுத்துவதற்கு பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் விஜயேந்திராவுக்கும் (முதல்வரின் மகன்) பணம் கொடுத்துள்ளார்" என்று பரபரப்பை கிளப்பினார்.
பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே இந்த விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்க, சும்மா இருக்குமா எதிர்க்கட்சி காங்கிரஸ்? வறுத்தெடுத்துவிட்டது.
"பலவீனமான முதலமைச்சர் மட்டுமே அச்சுறுத்தப்படுவார். எவரேனும் பிளாக் மெயில் செய்திருந்தால், அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். அவர்களின் சொந்த கட்சி உறுப்பினர்கள்தான் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள், எனவே இந்த விவகாரத்தில் சில உண்மைகள் இருக்கக் கூடும் என்று தெரிகிறது" என முன்னாள் முதல்வரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா விமர்சித்துள்ளார்.
மேலும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் பேசுகையில், "பாஜகவை பிளாக்மெயில் ஜனதா கட்சி என்று அழைக்க வேண்டும். இதைத்தான் அவர்களின் சொந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சொல்கிறார்கள். அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் முதல்வர் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும். குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.