நேற்று நடந்த ரகசிய மீட்டிங்.. சூப்பர் சிஎம் வருகையால் கோபம்.. கர்நாடகாவில் எடியூரப்பா அரசுக்கு செக்!
கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் 16 பேர் நேற்று இரவு நடத்திய ரகசிய மீட்டிங் அம்மாநில முதல்வர் எடியூரப்பாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் 16 பேர் நேற்று இரவு நடத்திய ரகசிய மீட்டிங் அம்மாநில முதல்வர் எடியூரப்பாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மஜத - காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் 17 பேர் ராஜினாமா கடிதம் அளித்ததால் ஆட்சி கவிழ்ந்தது.
கடந்த வருடம் ஜூலை மாதம் பெரும்பான்மையை நிரூபித்த எடியூரப்பா இடைத்தேர்தலுக்கு பின் 117 எம்எல்ஏக்கள் பலத்துடன் ஆட்சி நடத்தி வருகிறார். அங்கு பாஜகவிற்கு மூன்று சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள்.
தட்டிக்கேட்க ஆள் இல்லை.. தேசிய அளவில் புயலை கிளப்பும்.. பீகாரில் வேலையை காட்டும் பிரசாந்த் கிஷோர்!
தேர்தல் முடிந்து
அங்கு இடைத்தேர்தல் முடிந்து இரண்டு மாதம் கூட முழுதாக ஆகவில்லை. ஆனால் அதற்குள் எடியூரப்பா அரசுக்கு எதிராக 16 எம்எல்ஏக்கள் அங்கு காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வருகிறது. அதிலும் இந்த 16 பேரும் பாஜகவின் மூத்த உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் பல வருடங்களாக பாஜகவில் இருக்கும் எம்எல்ஏக்கள். இவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நேற்று மாலையில் இருந்து இரவு வரை ரகசிய மீட்டிங் நடத்தி இருக்கிறார்கள் என்று தகவல்கள் வந்துள்ளது.
ரகசிய மீட்டிங்
இவர்களின் இந்த ரகசிய மீட்டிங்கிற்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் காரணம் அமைச்சரவை விரிவாக்கம். கர்நாடகாவில் பாஜக மாநில அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு தாவிய 10 எம்எல்ஏக்கள் உட்பட 13 பேருக்கு அமைச்சரவை பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ரமேஷ் ஜார்கிஹோலி, ஆனந்த் சிங், பிசி பாட்டீல், கே சுதாகர், நாராயண கவுடா, எஸ் டி சோமசேகர், பாரதி பசவராஜ், கோபாலையா , சிவராம் ஹெப்பார், ஸ்ரீமந் பாட்டில் ஆகியோருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் என்ன
ஆனால் பாஜகவில் பல வருடங்களாக இருக்கும் பலருக்கும் அமைச்சரவை பதவி வழங்கப்படவில்லை. கட்சி தாவியவர்களுக்கு மட்டுமே எடியூரப்பா முக்கியத்துவம் கொடுத்தது பெரிய சர்ச்சை ஆனது. பெலகாவியில் இருந்து 8 முறை எம்எல்ஏவாக தேர்வான உமேஷ் கட்டி போன்ற பாஜகவின் தீவிர உறுப்பினர்களுக்கு கூட அமைச்சர் பதவி வழங்கப்படாதது சர்ச்சையானது.
திடீர்
இதுதான் இந்த திடீர் பிரச்னைக்கு காரணம் என்கிறார்கள். அதேபோல் இன்னொரு பக்கம், எடியூராப்பா அவரது மகனை கட்சிக்குள் கொண்டு வந்துவிட்டார். அவரது மகன் விஜயேந்திரா தற்போது கட்சியில் பெரிய நபர் ஆகிவிட்டார். அவர் சூப்பர் சிஎம் போல செயல்படுகிறார். அமைச்சர்கள் எல்லோரும் அவர் சொல்வதைத்தான் கேட்கிறார்கள். பாஜகவில் எதுவும் விதிமுறைப்படி நடக்கவில்லை. எடியூரப்பாவின் இந்த செயல் டெல்லி தலைமைக்கும் தெரியாது என்று புகார் வைத்துள்ளனர்.
மூன்றாவது ஆள்
இதுதான் பிரச்னைக்கு இரண்டாவது காரணம். மூன்றாவதாக, எடியூரப்பா கட்சிக்குள் வேறு யாரையும் வளர விடுவது இல்லை. தன்னுடைய ஜாதியை சேர்ந்தவர்களுக்கே அவர் முன்னுரிமை கொடுப்பது இல்லை. தான் மட்டுமே வளர வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அதனால் அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இவர்கள் 16 பேரும் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
Recommended Video
மிக மோசம்
கட்சிக்குள் ஏற்பட்டு இருக்கும் இந்த திடீர் பிரச்சனை பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எடியூரப்பா அரசு கவிழுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க போய் தன்னுடைய சொந்த கட்சியின் எம்எல்ஏக்களை அவர் பகைத்துக் கொண்டாரா என்றும் விவாதம் எழுந்துள்ளது. எடியூரப்பா இதை எப்படி சமாளிப்பார், பாஜக தேசிய தலைவர் நட்டா என்ன செய்ய போகிறார் என்று கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.