கதம்..கதம்.. எடியூரப்பா முதல்வர் பதவிக்கு ஆப்பு வைக்கிறது டெல்லி? வைரலாகும் பாஜக எம்.எல்.ஏ பேச்சு
பெங்களூரு: கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விரைவில் மாற்றப்படுவார் என பாஜக எம்.எல்.ஏ. பசன்கவுடா பாட்டீல் யட்னால் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்து எடியூரப்பா முதல்வரானார். ஆனால் பாஜகவில் 75 வயதானவர்கள் மூத்தோர் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படுவதுதான் வழக்கம். அதனால் எடியூரப்பாவுக்கு முதல்வர் பதவி கிடைக்குமா? என்கிற பேச்சு எழுந்தது.
"ஓகே..வா.. நல்லா புடிச்சுக்கோ.. வாடா.. வாடா.." சத்தியமங்கலத்தை பரபரப்பாக்கிய மாரிமுத்து
தலைக்கு மேல் தொங்கும் கத்தி
பின்னர் ஒருவழியாக எடியூரப்பா முதல்வரானார். இருந்தாலும் அவரது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே வயது இருந்து வந்தது. அண்மையில்கூட கர்நாடகா அமைச்சரவையில் இருந்து சிடி ரவி ராஜினாமா செய்தார். அவர் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்பது பின்பற்றப்படுவதால் அமைச்சர் பதவியை ரவி ராஜினாமா செய்தார்.
டெல்லி மேலிடம் தலையிடும்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல், 75 வயதுக்கு அதிகமானோர் கட்சி பதவியில் நீடிக்க கூடாது என்பதும் பாஜகவின் விதி என மறைமுகமாக எடியூரப்பாவை சுட்டிக் காட்டியிருந்தார். அத்துடன் இந்த விதியை பின்பற்றாவிட்டால் டெல்லி மேலிடமே தலையிட்டு செயல்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் நளின்குமார் கட்டீல் கூறியிருந்தார்.
பசன்கவுடா சர்ச்சை பேச்சு
இதனிடையே பாஜக எம்.எல்.ஏ. பசன்கவுடா பாட்டீல் யட்னால் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. கோவில் விழா ஒன்றில் பேசிய பசன்கவுடா, எடியூரப்பா நீண்டகாலம் முதல்வர் பதவியில் இருக்க மாட்டார். வடக்கு கர்நாடகா பகுதியைச் சேர்ந்த ஒருவர் விரைவில் முதல்வராக நியமிக்கப்படலாம் என கூறியுள்ளார்.
கர்நாடகாவில் நீடிக்கும் பரபரப்பு
மேலும் சிவமோகா மாவட்டத்துக்கான முதல்வராக மட்டுமே எடியூரப்பா செயல்படுகிறார் என பேசியிருக்கிறார். இதனால் எடியூரப்பாவின் பதவிக்கு எந்த நேரத்திலும் ஆபத்து காத்திருக்கிறது என்கின்றன கர்நாடகா வட்டாரங்கள்.