கர்நாடகாவிலும் கால் பதிக்கும் நிவர்.. 115 மி.மீ வரை மழை கொட்டப்போகுது! பெங்களூருக்கு 'மஞ்சள் அலர்ட்'
பெங்களூர்: நிவர் புயல் காரணமாக, பெங்களூர் உள்ளிட்ட தெற்கு கர்நாடகா பகுதிகளில் இன்றும் நாளையும் கன மழை பெய்யக் கூடும் என்பதால் மஞ்சள் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் புதன்கிழமையான இன்று நள்ளிரவு அல்லது வியாழக்கிழமை அதிகாலை, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயலின் காரணமாக, நேற்று முதலே, சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பொதுவாக இந்த பகுதிகளில் மழை பெய்யும் போது அதன் தாக்கம் பெங்களூர், கோலார் உள்ளிட்ட தெற்கு கர்நாடகா பகுதிகளிலும் எதிரொலிக்கும். அங்கு மழை பெய்யும். ஆனால், இன்றுவரை தெற்கு கர்நாடகா பகுதிகளில் மழை இல்லை, ஆனால் கடும் குளிர் நிலவி வருகிறது.
இந்த நிலையில்தான், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நவம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் தெற்கு கர்நாடகா மாவட்டங்களான, பெங்களூர், கோலார், சிக்கபள்ளாப்பூர், மண்டியா, ராம்நகர் மற்றும் சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் எப்படிப்பட்டது? அதிகம் பாதிக்க போகும் மாவட்டம் எது?.. தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
இடியுடன் கூடிய கனமழையுடன் பலத்த காற்றும் பெங்களூர் நகரில் வீசக்கூடும். மேலும் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் பெங்களூர் வாசிகளும் இரண்டு நாட்கள் வீடுகளுக்குள் இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.