யோகாதின விசிட்.. வெறும் 22.30 மணிநேரம் தான்.. பிரதமர் மோடிக்காக ரூ.56 கோடி செலவு செய்த கர்நாடகம்!
பெங்களூர்: சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக கர்நாடகம் சென்றார். பெங்களூர், மைசூரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற நிலையில் மொத்தம் ரூ.56 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சர்வதேச யோகா தினம் ஜூன் 21ல் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் மைசூர் அரண்மனை வளாகத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதற்காக அவர் திங்கட்கிழமை அதாவது ஜூன் 20ல் கர்நாடக மாநிலத்தின் தலைவர் பெங்களூர் சென்றார். அங்கிருந்து அன்றைய தினம் மைசூருக்கு அவர் சென்று மறுநாள் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
சர்வதேச யோகா தினம்.. மைசூரில் யோகாசனம் செய்த பிரதமர் மோடி.. நாடு முழுக்க பிரம்மாண்ட ஏற்பாடு!
2 நாள் பயணம்
இந்த 2 நாள் பயணத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை மதியம் 12.30 மணிக்கு பெங்களூர் சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். அதன்பிறகு அன்று மாலை மைசூர் சென்ற பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை காலை மைசூர் அரண்மனை வளாகத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பிறகு காலை 11 மணிக்கு மைசூரில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
ரூ.56 கோடி செலவு
பிரதமர் மோடி கர்நாடகத்துக்கு 2 நாள் பயணமாக வந்தாலும் கூட அவர் மொத்தம் 22 மணிநேரம் 30 நிமிடம் மட்டுமே அங்கு இருந்தார். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்தி மோடியின் இந்த பயணத்துக்காக மொத்தம் ரூ.56 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சாலை புனரமைப்பு உள்பட பல்வேறு விஷயங்களுக்காக இந்த தொகை செலவிடப்பட்டுள்ளது.
மைசூர் கலெக்டர் கூறுவது என்ன?
இதுபற்றி மைசூர் மாட்ட கலெக்டர் பாகதி கவுதம் கூறுகையில், ‛‛மைசூர் நகரை மேம்படுத்தும் பணிக்காக ரூ.10 கோடி செலவு செய்யப்பட்டடுள்ளது. மேலும் யோகா நிகழ்ச்சிக்காக ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் ரூ.6.1 கோடியும், பொதுப்பணித்துறை சார்பில் ரூ.7 கோடியும் செலவாகும் என கணக்கீடு செய்யப்பட்டது. இதுதொடர்பான செலவு பில்கள் இன்னும் வரவில்லை. அது வந்தவுடன் செலவு செய்ததன் மொத்த தொகை தெரியும்'' என்றார். இதுபற்றி மைசூர் மாநகராட்சி கமிஷனர் லட்சுமிகாந்த் ரெட்டி கூறுகையில், ‛‛மைசூர் நகரில் சாலை மேம்பாட்டு பணிக்காக மொத்தம் சுமார் ரூ.10.08 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
பெங்களூர் மாநகராட்சி சார்பில்...
இதுபற்றி பெங்களூர் மாநகராட்சியின் திட்டப்பிரிவு சிறப்பு கமிஷனர் ரவீந்திரா கூறுகையில், ‛‛பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி 14.05 கிலோமீட்டர் ரோடு மேம்படுத்தப்பட்டது'' என்றார்.இதுதொடர்பாக பெங்களூர் மாநகராட்சியின் கணக்குப்படி 2.4 கிலோமீட்டர் பல்லாரி ரோடுக்கு ரூ.4.06 கோடி, 0.9 கிலோமீட்டர் தும்கூர் ரோட்டுக்காக ரூ.1.55 கோடி, 3.6 கிலோமீட்டர் யூனிவர்சிட்டி ரோட்டுக்காக ரூ.6.05 கோடி, 0.15 கிலோமீட்டர் மைசூர் ரோட்டுக்காக ரூ.35 லட்சம் கொம்மகட்டா ரோட்டின் 7 கிலோமீட்டர் சாலை மேம்பாட்டுக்காக ரூ.11.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ள விவரம் வெளியாகி உள்ளது.
குமாரசாமி விமர்சனம்
இதனை மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் முதல்வர் குமாரசாமி விமர்சனம் செய்துள்ளார். ‛‛கர்நாடகாவில் வெள்ளப்பெருக்கு, வறட்சி ஏற்பட்ட போதும் கொரோனா தீவிரமாக இருந்தபோதும் பிரதமர் மோடி, வரவில்லை. இப்போது வந்துள்ளார். தேர்தல் நடைபெற உள்ளதால் அடுத்த 11 மாதங்களில், 11 முறை மாநிலத்துக்கு பிரதமர் வரக்கூடும். பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகாவுக்கு வந்து சென்றதால், 34 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணத்தில் ஒரு கிராம பஞ்சாயத்தை, அபிவிருத்தி செய்யலாம்'' என்றார்.