முதல்லேயே கேட்டிருக்கலாம்ல.. எனக்கு எய்ட்ஸ் இருக்கே.. பரவாயில்லையா.. அதிர வைத்த மாப்பிள்ளை!
தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக திருமணத்தை இளைஞர் நிறுத்தி உள்ளார்
பெங்களூர்: "எனக்கு எய்ட்ஸ் இருக்கே.. பரவாயில்லையா.. ஏன் என்னை கேட்காமல் கல்யாண ஏற்பாடு செய்யறீங்க" என்று மாப்பிள்ளை கேட்கவும் பெண் வீட்டாருக்கு தூக்கி வாரிபோட்டது.
பெங்களூரை சேர்ந்தவர் கிரண் குமார். 30 வயதாகும் இவர் அமெரிக்காவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்
இவருக்கு வீட்டில் பெற்றோர் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தனர். அதன்படியே பெங்களூரில் ஒரு பெண்ணையும் பார்த்து நிச்சயம் செய்தனர்.. நிச்சயதார்த்தம் போன ஜுன் மாதம் நடைபெற்றது. டிசம்பர் 1-ம் தேதி கல்யாணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது.
பின்னர் திடீரென்று ஒருநாள் மாப்பிள்ளை பெண் வீட்டுக்கு போன் செய்தார்.. "எனக்கு எய்ட்ஸ் இருக்கு.. உங்க பொண்ணை கல்யாணம் செய்துக்கிட்டால், அவளுக்கும் எய்ட்ஸ் நோய் ஒட்டிக்கும்" என்றார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டினர், "பொண்ணு பார்க்கும்போதே சொல்லி இருந்தால், இதை அப்பவே நிறுத்தி இருக்கலாமே"என்று கேட்டனர்.. இது இரு வீட்டுக்கும் தகராறாகவும் உருவெடுத்தது.
ஆனால் தன் மகனுக்கு எய்ட்ஸ் இல்லவே இல்லை என்று மாப்பிள்ளை வீட்டில் உறுதியாக சொல்லியும், பெண் வீட்டார் நம்பவில்லை. எனவே, "உங்களுக்கு சந்தேகமா இருந்தா, மாப்பிள்ளையை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்று செக் செய்து பாருங்கள்" என்று சொன்னார்கள். அதன்பின்பு மாப்பிள்ளையை அழைத்து கொண்டு, ஆஸ்பத்திரியில் எச்ஐவி டெஸ்ட் எடுக்கப்பட்டது.. ஆனால் கிரண்குமாருக்கு எய்ட்ஸ் இல்லை என்று ரிப்போர்ட் வந்தது.
இப்போது இரு குடும்பத்தினர் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். துருவி துருவி கேட்டதில், தனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என்பதால், அப்படி பொய் சொன்னதாக கூறினார். இதை கேட்டு இன்னும் கடுப்பான பெண் வீட்டினர், இதை முதல்லயே சொல்லி இருந்தால், 13 லட்சம் செலவு செய்திருக்க மாட்டோமே என்று சொல்லி, கிரண்குமார் மீது போலீசில் புகார் தந்தனர்.
இதையடுத்து, போலீசார் கிரண்குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். விருப்பம் இல்லாமல் நடந்த திருமணம் என்பதால்தான் பொய் சொன்னேன் என்று கிரண்குமார் சொன்னாலும், இந்த வழக்கு கோர்ட் வரை சென்று, இப்போது ஜாமீன் கிடைத்து வெளியே வந்துள்ளார் கிரண்குமார்!