ஆஹா.. இது அலேக் ஐடியாவா இருக்கே.. சுமைதாங்கிகள் ஆன கல்வித்தந்தைகள்!!
சென்னை: மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியின் நிதிச் செலவுகளை இரு கல்வித் தந்தைகள்தான் கவனிக்கப் போவதாக பரபரக்கிறது தேர்தல் களம்.
மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம், ஐ.ஜே.கே., புதிய நீதிக்கட்சி, உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகின்றன. இதில் அதிமுக வேட்பாளர்களின் தேர்தல் செலவை பற்றி பெரிதாக கவலைப்பட தேவையில்லை.
அமைச்சர்களின் உறவினர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு அதிமுக தலைமை சீட் கொடுக்க உள்ளதால், அவர்களே பணத்தை பாதாளம்
வரை பாய்ச்சுவார்கள். ஆனால் பாஜக வேட்பாளர்களில் பலரும் செலவுக்கு திக்கி திணறும் நிலையில் உள்ளனர்.
கையில சீட்டு.. கொடுக்கணும் நோட்டு
இதனால் அவர்களின் தேர்தல் செலவுகளை இரண்டு கல்வித்தந்தைகள் தலையில் கட்டிவிட்டாராம் அமித்ஷா. பாஜக கூட்டணியில் உள்ள பாரிவேந்தரும், ஏ.சி.சண்முகமும் சரிபாதியாக தேர்தல் செலவு செய்ய ஒத்துக்கொண்டார்களாம்.
பாமகவின் ஸ்பான்சர் அதிமுக
பாமகவை பொறுத்தவரை தேர்தல் செலவுக்கு அதிமுக தரப்பில் இருந்து சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளதால் அந்தக் கட்சியும் தெம்பாகவே உள்ளது. இதில் தேமுதிக நிலைதான் பரிதாபமாக உள்ளதாம்.
தேமுதிகதான் பரிதாபம்
தேமுதிக வேட்பாளர்களின் செலவை ஏற்க அதிமுக ரொம்பவே தயங்குகிறதாம். கடந்த 2011-ல் இப்படித்தான் செலவு செய்து தேமுதிகவை எதிர்க்கட்சியாக கொண்டு வந்தோம், அந்த நன்றியை மறந்து அம்மாவிடமே நாக்கை துருத்தினார் விஜயகாந்த். அதனால் இந்த முறை செலவுக்கெல்லாம் நயா பைசா கொடுக்கக் கூடாது என மூத்த நிர்வாகிகள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.சிடம் வலியுறுத்துகிறார்களாம்.
எதுக்கு வீண் செலவு
மேலும்,விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வராத நிலையில், தேமுதிகவுக்கு செலவு செய்வது வீண்வேலை எனவும் அவர்கள் கூறுகிறார்களாம். இதைக் கேள்விப்பட்டு தேமுதிக தலைமைக் கழக நிர்வாகிகள் நொந்து நோடுல்ஸ் ஆகிவிட்டார்களாம். அதிமுக அளிக்கும் 4 தொகுதிகளிலும் போட்டியிட வைக்க பசையுள்ள பார்ட்டிகளை தேடி வருகிறதாம் தேமுதிக தலைமை.