விறுவிறுப்படையும் மார்க்கெட்டிங் துறை...3 ஆண்டுகளில் 1 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும்
இந்தியாவின் சந்தைப்படுத்துதல் துறை வேகமாக வளர்ந்து வருவதால் அடுத்து வரும் 3 ஆண்டுகளில் 1 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மும்பை: இந்தியாவின் சந்தைப்படுத்துதல் துறை வேகமாக வளர்ந்து வருவதால் அடுத்து வரும் 3 ஆண்டுகளில் 1 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டால், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதுவும் சேவைப் பிரிவிலும், விற்பனைப் பிரிவிலும் தேவை அதிகமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
ஆய்வாளர்களின் சொன்னது போலவே, ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்பு உற்பத்தி அதிகரித்ததால், உற்பத்திக்கு பிந்தைய விற்பனைப் பிரிவிலும், கூடவே சேவைப் பிரிவிலும் ஆட்களுக்கான தேவை அதிகரிக்க ஆரம்பித்தது. காரணம் விற்பனைக்கு பிந்தைய கணக்குகளை தாக்கல் செய்வதற்கு அனுபவம் மிக்க கணக்காளர்களும், கணக்கு ஆலோசர்களும் தேவைப்பட்டது.
விற்பனை பிரிவில் சேவை
விற்பனைப் பிரிவிலும் சேவைப் பிரிவிலும் ஆட்களுக்கான தேவை அதிகமாக இருந்தாலும், தொழிலாளர் நலச் சட்டங்களிலும், அதனோடு தொடர்புடைய மற்ற சட்டங்களையும் முறையாக சீர்திருத்தம் செய்தால் மட்டுமே திறமையான ஆட்களை விற்பனைப் பிரிவுகளிலும் அதனோடு தொடர்புடைய விநியோகம் மற்றும் சேவைப் பிரிவிலும் போதுமான ஆட்களை தேர்ந்தெடுக்க முடியும்.
சட்டங்களில் மாற்றம்
தொழிலாளர் நலச் சட்டங்களில் நாம் உடனடியாக குறைந்த பட்சம் 10 ஒழுங்குமுறை விதிகளையாவது முறையாக சீர்த்திருத்தங்கள் செய்தோமானால், அதன் பலனாக அடுத்து வரும் 3 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 1 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். அதிகமான மக்கள் தொகையும் சிக்கலான நடைமுறைகளும் உள்ள நம் நாட்டில் நாம் எதையும் எளிதில் விட்டுவிட முடியாது, என்று டீம்லீஸ் சர்வீஸஸ் (Teamlease Services) நிறுவனத்தின் துணைத் தலைவரும் இணை நிறுவனருமான ரிதுபர்ணா சக்ரவர்த்தி தெரிவித்தார்.
ஜிஎஸ்டி அமலாக்கல்
நகரமயமாக்கலினால் உயரும் நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம், இன்றைய இளைய சமுதாயத்தினரின் கட்டுப்பாடில்லாத செலவு செய்யும் போக்கு மற்றும் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிமுறை ஆகியற்றினால் வேலை வாய்ப்புகள் உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.
விற்பனைப் பெருக்கம்
வர்த்தக நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, தங்கள் நிறுவனங்களின் விற்பனையை மேம்படுத்தவும், நவீனப் படுத்தவும், விற்பனையை மென்மேலும் அதிகரிக்கவும், விரிவாக்கம் செய்யவும், விரைவாக விற்பனையைப் பெருக்கவும் உதவும் என்று கூடுதலாக சக்ரவர்த்தி தெரிவித்தார்.
வளர்ச்சிக்கு ஏற்ற சூழல்
பணப்புழக்கம் அதிகம் உள்ள மும்பை நிதி மற்றும் மூலதனச் சந்தையின் தலைநகரமாக விளங்குவதாலும், வளர்ச்சிக்கு ஏற்ற சூழுல் நிலவுவதாலும், அதிக அளவில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும். அதுவும் நிதித் துறை, வங்கி சேவைகள் மற்றும் காப்பீட்டு (BFSI) துறையில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் சக்ரவர்த்தி தெரிவித்தார்.
காப்பீட்டுத்துறை வேலை வாய்ப்பு
மும்பையில் தற்போது நிதித் துறை, விற்பனைத் துறை, வங்கிகள் மற்றும் காப்பீட்டு துறைகளில் 3,35,000 விற்பனையாளர்கள் பணியில் உள்ளனர். இது நாடு முழுவதும் உள்ள சுமார் 15 லட்சம் விற்பனைப் பணியாளர்களின் எண்ணிக்கையில் 1.5 சதவிகிதம் ஆகும் என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
தொழிலாளர் சட்டங்கள் சீர்த்திருத்தம்
தொழிலாளர் சட்டங்களை ஒழுங்குமுறை சீர்திருத்தம் செய்வதால், மும்பையில் மட்டும் வரும் 3 ஆண்டுகளில் விற்பனைப் பிரிவில் குறைந்தபட்சம் 3,60,000 வேலை வாய்புகளை உருவாக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை இதை மனதில் வைத்துக் கொண்டுதான் பிரதமர் மோடி படித்த இளைஞர்கள் பக்கோடா விற்பதும் ஒரு கௌரவமான வேலைதான் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் சொன்னாரோ!.