2017ல் ராஜநடை போட்ட இந்தியப் பங்குச் சந்தை... 34ஆயிரம் புள்ளிகளை கடந்து அசத்தல்
2017ஆம் ஆண்டு இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. ராஜ நடை போட்ட பங்குச்சந்தைகள் பற்றி ஒரு அலசல்.
டெல்லி: உயர் நாணய மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு மற்றும் குறைந்து வரும் சில்லறை பணவீக்க விகிதம் போன்ற காரணங்களையும் தாண்டி 2017ஆம் வருடத்தில் இந்திய பங்குச் சந்தைகள் அபார வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கறுப்பு பணம் மற்றும் கள்ள பொருளாதாரத்தை ஒழிக்கும் விதத்தில் 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 500 மற்றும் 1000 ஆகிய உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி கையில் எடுத்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத இந்தியப் பங்குச் சந்தைகள் 2016, நவம்பர் 9ம் தேதியன்று காலையில் சுமார் 5 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தன.
Recommended Video
பின்னர் சுதாரித்துக் கொண்டு உயர ஆரம்பித்த சந்தைகள் அன்றைய வர்த்தகத்தின் இறுதியில் சுமார் 1.30 சதவிகிதம் மட்டுமே வீழ்ச்சி கண்டது. இருந்தாலும் 2016ம் ஆண்டு இறுதியில் சுமார் 2.30 சதவிகிதம் அதிகரித்து முடிந்தது.
பங்குச்சந்தையில் முதலீடு
உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் 2017 ஏப்ரல் முதல் முற்றிலும் புதிய வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை எப்படி இருக்குமோ என்ற குழப்பத்துடனேயே இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் 2017ம் ஆண்டில் முதலீட்டை ஆரம்பித்தனர்.
புலிப் பாய்ச்சல்
இருந்தாலும் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தற்காலிகமாக இந்தியப் பொருளாதாரம் தள்ளாடினாலும் 2018ம் ஆண்டிலிருந்து வேகமெடுக்கும் என்று அனைத்து பொருளாதார வல்லுநர்களும் உறுதியாக நம்பிக்கை தந்ததாலும் இந்தியப் பங்குச் சந்தைகள் வேகமெடுக்க ஆரம்பித்தன. கூடவே ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது ஜூலை 1ம் தேதி முதல்தான் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்ததாலும் புலிப் பாய்ச்சல் காட்ட ஆரம்பித்தன.
இதனால் வருட ஆரம்பத்தில் 8185.80 என்ற நிலையில் இருந்த தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி மார்ச் காலாண்டின் முடிவில் சுமார் 988 புள்ளிகள் அதாவது 12 சதவிகிதம் உயர்ந்து 9173.75 என்ற அளவில் நிலை பெற்றது. மும்பை பங்குச் சந்தை குறியீடான பிஎஸ்சி சுமார் 2994 புள்ளிகள் அதிகரித்து 29552.61 என்ற அளவில் நிலை பெற்றது.
இந்திய பங்குச்சந்தையில் எதிரொலி
2016-17ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 12 சதவிதிம் அதிகரித்து முடிந்த இந்தியப் பங்குச் சந்தைகள், 2017-18ம் ஆண்டின் முதல் காலாண்டின் ஆரம்பத்தில் சற்று நிதானித்து தன் பயணத்தை தொடர்ந்தது. ஏனென்றால், ஏப்ரல்-ஜூன் காலாண்டுதான் வாட் வரிவிதிப்பின் கடைசி காலாண்டு ஆகும். இதனால் வரவிருக்கம் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை எப்படி இருக்குமோ என்ற பயம் தொழில் துறையினர் மத்தியில் மீண்டும் தலை தூக்கத் தொடங்கியது. இதனால் உற்பத்தியும் விற்பனையும் சரியத் தொடங்கின. இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது.
பிஎஸ்சி உயர்வு
இதனால் புதிய நிதி ஆண்டில் கனஜோராக ஏற ஆரம்பித்த இந்தியப் பங்குச் சந்தைகள் சற்று நிதானிக்க ஆரம்பித்தன. இதன் காரணமாக 2017-18ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டு இறுதியில் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி சுமார் 347 புள்ளிகள் அதாவது 4 சதவிகிதம் மட்டுமே அதிகரித்து 9520.90 என்ற அளவில் நிலை பெற்றது. அதுபோலவே மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான பிஎஸ்சி 1301 புள்ளிகள் அதாவது சுமார் 4 சதவிகிதம் மட்டுமே அதிகரித்து 30921.61 என்ற அளவில் நிலை பெற்றது. ஆனால், அதே சமயத்தில் கடந்த ஆண்டின் இதே காலாண்டின் இறுதியில் தேசியப் பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டியும் மும்பை பங்குச் சந்தைக் குறியீடான பிஎஸ்சியும் சுமார் 7 சதவிகிதம் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி வரி அமல்
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்ப, பெரும் எதிர்பார்ப்பிற்கும் குழப்பத்திற்கும் இடையில் சுமார் 11 ஆண்டுகள் நடைமுறையில் இருந்த வாட் வரி விதிப்பு முறை ஏறக்குறைய ஒழிக்கப்பட்டு ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையானது இந்தியாவிற்கு முற்றிலும் புதிய வரி விதிப்பு முறை என்பதால் வர்த்தகர்களும் தொழில் துறையினரும் ஆரம்பத்தில் சற்று குழம்பினாலும், பின்னர் அதில் உள்ள படிவங்களையும் விதி முறைகளையும் ஓரளவு புரிந்து கொண்டு தங்களின் வர்த்தக முறைகளை தொடர ஆரம்பித்தனர்.
ஜிஎஸ்டிக்கு அதிருப்தி
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் அமல்படுத்தப்பட்ட நான்கு முனை வரிகளான 5, 12, 18 மற்றும் 28 சதவிகித வரிகளால் தொழில் துறையினரும் வர்த்தகர்களும் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர். ஏனென்றால் வாட் வரி விதிப்பு முறையில் முற்றிலும் வரி விலக்கு மற்றும் குறைந்த பட்ச வரி விகிதமாக இருந்த பெரும்பாலான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் 18 முதல் 28 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் வர்த்தகர்களும் தொழில் துறையினரும் உயர்ந்த பட்ச வரியை குறைக்கவும், வரி விலக்கு அளிக்கவும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி
மத்திய அரசும் இவர்களின் கோரிக்கையை அடுத்தடுத்து நடைபெற்ற ஜிஎஸடி வரி விதிப்பு கூட்டத்தில் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக அறிவித்தது. இதனால் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் உற்பத்தி சரிவடைந்தது. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் சரிந்து அதனால் சில்லறை பணவீக்க விகிதமும் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவில் சரிவை சந்தித்தது.
பங்குச்சந்தைகள் பலம்
இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தன. இதனால் இந்த காலாண்டின் இறுதியில் தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 267.70 புள்ளிகள் அதாவது சுமார் 2.81 சதவிகிதம் மட்டுமே அதிகரித்து 9788.60 என்ற அளவில் நிலை பெற்றது. ஆனால், அதே சமயத்தில் கடந்த ஆண்டின் இதே காலாண்டு இறுதியில் 3.90 சதவிகிதம் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே மும்பை பங்குச் சந்தைக் குறியீடான பிஎஸ்சி 362.11 புள்ளிகள் மட்டுமே அதிகரித்து அதாவது சுமார் 1.17 சதவிகிதம் மட்டுமே அதிகரித்து 31283.72 என்ற அளவில் நிலை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டின் இதே காலாண்டின் இறுதியில் 3.21 சதவிகிதம் அதிகரித்து இருந்தது.
கை கொடுத்த பருவமழை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பருவமழை நன்கு பெய்ததால் அனைத்து பகுதிகளிலும் விவசாய உற்பத்தி நன்கு இருந்ததால் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்தது. இதனால் பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ள விவசாய உற்பத்தி நிறுவனங்களின் லாபம் அதிகரித்தது. இதனால் பங்குச் சந்தையும் வேகமாக உயர ஆரம்பித்தது.
வளர்ச்சியை நோக்கி இந்திய பொருளாதாரம்
அதுபோலவே, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் உள்ள வரி விகிதங்களின் ஏற்றத் தாழ்வுகள் ஓரளவு சரி செய்யப்பட்டு விட்டதாலும், ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் நிலவிய தொழில்நுட்ப பிரச்சினைகள் சரி செய்யப்பட்டுவிட்டதாலும் தொழில்தறையின் உற்பத்தியும் உயரத் தொடங்கியது. கூடவே, அனைத்து வெளிநாட்டு பொருளாதார ஆய்வு நிறுவனங்களும், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வரும் ஆண்டுகளில் 7 சதவிகிதத்தை தாண்டும் என்று சத்தியம் செய்யாத குறையாக அடித்துக் கூறுகின்றனர்.
34ஆயிரத்தை தாண்டியது
இதனால் சந்தைகள் நிச்சயமாக மேலே செல்லும் என்று இந்திய சந்தையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும், இந்திய மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களும் மிகுந்த நம்பிக்கையுடன் இந்திய பங்குச் சந்தைகளில் தங்களின் முதலீட்டை தொடர்ந்தனர். அவர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை. கடந்த 27ம் தேதி அன்று இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 10552.40 என்ற அளவினையும், மும்பை பங்குச் சந்தையான பிஎஸ்சி 34138 என்ற புதிய உச்சத்தை தொட்டன.
மும்பை பங்குச்சந்தை உயர்வு
2017ம் ஆண்டின் கடைசி வர்த்தக நாளான டிசம்பர் 29ம் தேதி அன்று வர்த்தகத்தின் இறுதியில் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 10530.70 என்ற அளவிலும் மும்பை பங்குச் சந்தையான பிஎஸ்சி 34056.83 என்ற அளவிலும் நிலைபெற்றன. ஒட்டு மொத்தமாக 2017ம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தைகள் சுமார் 28 சதவிகிதம் ஏற்றம் பெற்றன. ஆனால் அதே சமயத்தில் 2016ம் ஆண்டில் 2.30 சதவிகிதமே அதிகரித்து இருந்தன.
மோடியின் செயல்பாடுகள்
2017ம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தைகளின் அசுர வளர்ச்சிக்கு மிக மிக முக்கிய காரணியாக இருந்தது பிரதமர் மோடியின் உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கையாகும். உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையாள் அப்போதைக்கு இந்திய பங்குச் சந்தைகள் சற்று தள்ளாடினாலும், பின்னர் பிரதமர் மோடியின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்திய பங்குச் சந்தைகள் உயர ஆரம்பித்தன. இதனாலேயே 2017ம் ஆண்டின் 28 சதவிகி வளர்ச்சியை அடைந்தன என்று பங்குச் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆரம்பமே அமர்களம்
கடந்த 2017ம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தைகள் உச்சம் பெற்றாலும், 2018 ஜனவரி முதல் தேதியில் சற்று தள்ளாடியது. காரணம் இந்திய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க ஆரம்பித்ததனால்தான். எப்படி இருந்தாலும் இந்த ஆண்டு கடந்த ஆண்டைக் காட்டிலும் சிறப்பாக இருக்கும் என்று பிரபல பங்குச் சந்தை ஆய்வு நிறுவனமான கோட்டக் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.
எந்த துறை வளர்ச்சி
வரும் வாரங்களில் சந்தையானது நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளைப் பொறுத்தே இருக்கும் என்று தெரிகிறது. இருப்பினும் துறைகள் வாரியாக பார்க்கும்போது வங்கிகள் மற்றும் நிதிச்சேவை, கட்டுமானம், வாகன உற்பத்தி மற்றும் வாகன உதிரிப் பாகங்கள், ஆடைகள், மருத்துவம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகள் நன்கு வளர்ச்சி பெறும் என்று தெரிகிறது.