இந்தியாவில் கோடீஸ்வரர்கள், லட்சாதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - கிரெடிட் சூயிஸ் அறிக்கை
இந்தியாவில் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை ஜூன் இறுதி வரை 2,45,000 லட்சமாக அதிகரித்துள்ளதாக கிரெடிட் சூயிஸ் நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது.
மும்பை: இந்தியாவில் பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது என்று கிரெடிட் சூயிஸ் நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவிலான பொருளாதார மந்த நிலைக்குப் பின்னர் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை ஜூன் இறுதி வரை 2,45,000 லட்சமாக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் 92 சதவீத இந்தியர்களின் வருமானம் ரூ.6.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது என்று கிரெடிட் சூயிஸ் நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது.
சொத்து மதிப்பு வளர்ச்சி
இந்த அறிக்கையின்படி 2000ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு ஆண்டு வளர்ச்சி 9.2 சதவிகிதமாக உள்ளது. சர்வதேச அளவிலான 6 சதவீத சராசரி வளர்ச்சி விகிதத்தைவிட இது அதிகமாகும்.
பெரும் கோடீஸ்வரர்கள்
இந்தியாவில் கோடீஸ்வரர்களில் எண்ணிக்கை 1,820 ஆகவும், பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 42 ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்திய லட்சாதிபதிகள்
பணமதிப்பு நீக்கத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கின் படி 2016ம் ஆண்டு சொத்து மதிப்பு அறிக்கை அடிப்படையில், 2015 ம் ஆண்டு இறுதி வரை 2,36,000 லட்சாதிபதிகள் இந்தியாவில் உள்ளனர். 2025 ம் ஆண்டில் இந்திய லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 5.54 லட்சமாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 லட்சம் கோடி டாலர்
2000ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுவரையில் சொத்து மதிப்பு 4 மடங்கு உயர்ந்துள்ளது. 2017ஆம் ஆண்டில் 5லட்சம் கோடி டாலரை தொட்டுள்ளது. எனினும் இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் 92 சதவீத மக்களின் சொத்து 10,000 டாலருக்குள் அல்லது ரூ.6.5 லட்சம் என்கிற அளவுக்குள்தான் உள்ளது.
70 சதவிகித மக்கள்
5.7 சதவீத இந்தியர்கள் நடுத்தர சொத்து மதிப்பு கொண்டவர்களாக உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு 10,000 டாலர் முதல் 1,00,000 டாலர் என்கிற அளவுக்குள் உள்ளது. ஆனால் சர்வதேச அளவில் 70 சதவிகித மக்களின் சொத்து மதிப்பும் 10000 டாலருக்குள் இருக்கிறது.
தனிநபர் சொத்து மதிப்பு
2007 ம் ஆண்டு முதல் உலகின் பல நாடுகளில் செல்வந்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் தனிநபர் சொத்து மதிப்பு 55 சதவீதம் அதிகரித்துள்ளது. 2007 ம் ஆண்டு முதல் 2015 ம் ஆண்டு வரை இந்தியாவில் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 2,36,000 ஆக அதிகரித்துள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
தனிநபர் வருமானம்
கட்டுமானம், நிதித்துறை, ஐடி, தொழில்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் அபரிமிதமான வளர்ச்சியை காரணமாக , பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டதே இந்தியாவில் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு காரணம் என கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் தனிநபர் வருமானம் அதிகரிக்கும் என கணக்கிடப்படும் நாடுகளில் இந்தியா முக்கிய இடம்பிடித்துள்ளது.