5 மாநில தேர்தல் மள மளவென சரிந்த இந்திய பங்குச்சந்தை- முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
5 மாநில தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு பாதகமாக உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
டெல்லி: ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சட்டீஸ்கர் மற்றும் மிசோராம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ளன. மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
ஐந்து மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியான போதே பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. டிசம்பர் 10ஆம் தேதி சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 713.53 புள்ளிகள் என 2 சதவிகிதம் சரிந்து 34,959.72 புள்ளியாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 205.25 புள்ளிகள் என 1.92 சதவிகிதம் சரிந்து 10,488.45 புள்ளியாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
டிசம்பர் 11ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் காங்கிரஸ் கட்சியின் கையே ஓங்கியிருந்தது. இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போதே மும்பை பங்குச்சந்தை 34,603.72 புள்ளிகளுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 290 புள்ளிகள் சரிவுடன் சென்செக்ஸ் 34660 ஆகா காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி பொறுத்தமட்டில் 86 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 10402 புள்ளிகளாக குறைந்தது.
காலை 9.40 மணியளவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 505.52 புள்ளிகள் என 1.45 சதவிகிதம் சரிந்து 34,450.83 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடு 142.65 புள்ளிகள் என 1.36 சதவிகிதம் சரிந்து 10,357.70 புள்ளியாகவும் வர்த்தகமானது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா, 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக இல்லாத நிலையிலும், கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க இருப்பதாக ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்ததும் இந்திய பங்குச்சந்தைகளின் சரிவிற்கு முக்கிய காரணம் என சந்தையை கணிக்கும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.