வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு... 7.5%ஜிடிபி வளர்ச்சி எப்படி போதும்? - ரகுராம் ராஜன்
நாட்டின் முக்கிய பிரச்சனையான வேலையில்லாத் திண்டாட்டம் என்பது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஹாங்காங்: நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க வேண்டுமானால், 7.5 சதவிகித ஜிடிபியை வைத்துக்கொண்டு நாம் எதுவும் செய்யமுடியாது என்று முன்னால் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கவலை தெரிவித்துள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பின்பு நாட்டின் உள்நாட்டு உற்பத்தி சீரான வேகத்தில் உயர்ந்துகொண்டு இருக்கின்றது.
இதே வேகத்தில் வளர்ச்சி இருக்குமானால் வரும் 2019ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிச்சயமாக 7.5 சதவிகிதம் முதல் 8 சதவிகிதம் வரை எட்டக்கூடும் என்று நாட்டின் புள்ளியியல் துறை தொடங்கி உலக வங்கி வரையில் சத்தியம் செய்யாத குறையாக அடித்துச் சொல்கின்றன.
பொருளாதார வளர்ச்சி
நாட்டின் பொருளாதார வளர்ச்சி திருப்தியாக இருந்தாலும், மறுபுறத்தில் நாட்டின் முக்கிய பிரச்சனையான வேலையில்லாத் திண்டாட்டம் என்பது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிப் படிப்பையும் தொழில் கல்வியையும் முடித்துவிட்டு வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
மோடி பேச்சு
வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைப்பதற்கு மத்திய அரசிடம் எந்த விதமான திட்டம் உள்ளது என்பது பற்றி தெளிவான வரையறை இல்லை. ஆனால், பிரதமர் மோடி பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்புதான், கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு இல்லை
பிரதமர் மோடியின் கருத்து குறித்து முன்னாள் பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் சமீபத்தில் காங்கிரஸ் மாநாட்டில் பேசும்போது கருத்து தெரிவிக்கையில், பிரதமர் மோடி அவர்கள், 2014ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் எதுவும் செய்யவில்லை. ஏன் கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகள் கூட உருவாக்கப்படவில்லை என்று காட்டமாக கருத்து தெரிவித்திருந்தார்.
இந்திய பொருளாதார வளர்ச்சி
முன்னாள் பிரதமர் டாக்டர், மன்மோகன் சிங்கின் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல, தற்போது முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனும் கருத்து தெரிவித்துள்ளார். ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், நாம் இப்போது மிக முக்கியமான தருணத்தில் இருக்கிறோம்.
7.5 சதவிகித ஜிடிபி வளர்ச்சி
நம்மால் எதுவும் செய்ய முடியும். நாம் அரசியல் ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இப்போது இருக்கின்ற 6.8 சதவிகித ஜிடிபி அல்லது 7.5 சதவிகித ஜிடிபி வளர்ச்சியை வைத்துக்கொண்டு எதுவும் செய்யமுடியாது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1கோடிக்கும் அதிகமானவர்கள் படித்துவிட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அவர்களின் தேவையை பூர்த்தி செய்யவேண்டுமானால் வெறும் 7.5 சதவிகிதம் என்பது போதுமானதாக இருக்காது.
சீர்திருத்தம் தேவை
நம்மிடம் அதிகப்படியான மனித வளம் உள்ளது. கூடவே இளைய சமுதாயத்தினரின் பலமும் உள்ளது. ஆனால், அதை பயன்படுத்த முறையான சீர்திருத்தங்கள் தேவை. இவற்றை எல்லாம் முறையாக பயன்படுத்த வேண்டும். அவ்வாறு மனித வளத்தை தொழில் துறையிலும், விவசாயத் துறையிலும், உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
10 சதவிகித பொருளாதார வளர்ச்சி
இவை அனைத்தும் சீராக நடைபெற்றால் தான் தொழில் துறைக்கும் விவசாயம் மற்றும் பிற துறைகளிலும நம்பிக்கை உருவாகும். இவை அனைத்தும் முறையாக நடைபெற்றால் நிச்சயமாக 10 சதவிகித ஜிடிபி வளர்ச்சியை எட்ட முடியும். 10 சதவிகித பொருளாதார வளர்ச்சியை எட்டினால் மட்டுமே நாம் எதிர்பார்க்கும் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று கூறினார்.