பணப்புழக்கம் பிப்ரவரி இறுதிக்குள் சரியாகும் - எஸ்.பி.ஐ ஆய்வறிக்கை
நாட்டில் பண புழக்கம் பிப்ரவரி மாதத்தில் சீராகும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும், டெபாசிட் செய்யலாம் எனவும் பிரதமர் மோடி அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து மக்கள் தங்களிடமிருந்த மதிப்பிழந்த அந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்தினர். அவற்றுக்கு மாற்றாக புதிய வடிவிலான ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை வங்கிகள் மூலமாக மக்களுக்கு ரிசர்வ் வங்கி விநியோகித்து வருகிறது.
உயர்மதிப்புடைய பணம் திரும்ப பெறப்பட்டு 70 நாட்களுக்கு மேலாகிவிட்டது. நாட்டில் பணப்புழக்கம் இன்னும் சீராகவில்லை, ஏடிஎம்களில் பணத்தை எடுக்கும் விதிமுறை தளர்த்தப்பட்டு ரூபாய் 10000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பல ஏடிஎம்கள் இன்னும் காட்சிப்பொருளாகவே உள்ளது.
மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம்களிலும் காத்துக்கிடப்பதும் இன்னும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் வருகிற பிப்ரவரி மாதத்தில் நாட்டில் பணபுழக்கம் சீராகும் என்றும், வாபஸ் பெறப்பட்ட நோட்டுகளில் சுமார் 70 சதவிகித நோட்டுகள் விநியோகிக்கப்பட்டுவிடும் என்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.8 பில்லியன் அளவிற்கு புதிய ரூபாய் நோட்டுகள் ஒரு மாதத்திற்கு அச்சிடப்படுகின்றன. டிசம்பர் 19, 2016 வரை 5.9 டிரில்லியன் நோட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது 500 ரூபாய் நோட்டுக்கள் அதிகம் அச்சிடப்படுவதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஆய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், பிப்ரவரி மாத இறுதிக்குள் வாபஸ் பெறப்பட்ட நோட்டுகளின் மதிப்பில் 70 சதவிகித நோட்டுகள் விநியோகிக்கப்படும் என்று கணித்துள்ளோம். ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் கோடி என்ற விகிதத்தில் பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. இதைப் பார்க்கும்போது, பிப்ரவரி மாத இறுதியில் இயல்புநிலை திரும்பி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் எடுத்துள்ள முடிவின்படி, பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 7,575 கோடி கூடுதல் மூலதனம் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதில் 75 சதவீதத் தொகையான ரூ. 5,681 கோடி ஏற்கெனவே வங்கிக்கு அளிக்கப்பட்டுவிட்டது. இதையொட்டி மத்திய அரசுக்கு முன்னுரிமை அடிப்படையில் பங்கு வெளியிட வங்கியின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தது. தற்போது ரூ. 1,894 கோடி கூடுதல் மூலதனத்தை செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.