ஆதார் கார்டினால் ரூ.90,000 கோடி மிச்சம் - மருத்துவக் காப்பீடு பெற ஆதார் கட்டாயம்
ஆதார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இதுவரையில் அரசுக்கு ரூ.90,000 கோடி மிச்சமாகியுள்ளதாக இந்தியத் தனிநபர் அடையாள ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆதார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இதுவரையில் அரசுக்கு ரூ.90,000 கோடி மிச்சமாகியுள்ளதாக இந்தியத் தனிநபர் அடையாள ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார். ஆதார் திட்டம் வந்த பிறகு அரசின் அனைத்து நலத் திட்ட உதவிகள் பெறவும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. மருத்துவக் காப்பீடு திட்டம் பெற ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் சார்பாக ஹைதராபாத் நகரில் மூன்று நாள் மாநாடு ஜூலை 11ஆம் தேதி தொடங்கியது. இக்கூட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய இந்தியத் தனிநபர் அடையாள ஆணையத்தின் தலைவரான ஜே.சத்ய நாராயணா, ஆதார் திட்டத்தால் இதுவரையில் ரூ.90,000 கோடிக்கு மேல் சேமிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, உணவு மற்றும் பொது விநியோகம், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளை வைத்தே இந்த விவரங்கள் கிடைத்துள்ளன.
சராசரியாக ஒரு நாளைக்கு 3 கோடி மக்கள் ஆதாரைப் பயன்படுத்துகின்றனர். ரேஷன், பென்சன், கிராமப்புற வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட தேவைகளுக்காகவே ஆதார் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
பயோ மெட்ரிக் பயன்பாட்டில் நிறைய ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன. ஆதார் நடைமுறையில் அதிகப் பாதுகாப்பு, ஆதார் பதிவைச் சுலபமாக்குவது, மோசடிகளை எளிதாகக் கண்டறிவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
ஆதார் திட்டம் வந்த பிறகு அரசின் அனைத்து நலத் திட்ட உதவிகள் பெறவும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்களுக்குச் சேரவேண்டிய நலத் திட்ட உதவிகளும் மானியமும் இடைத் தரகர்களால் சுரண்டப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே ஆதார் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே நாடு முழுவதும் ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மருத்துவக் காப்பீடு திட்டம் பெற ஆதார் கட்டாயம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2018-2019 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நாடு முழுவதும் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி அறிவித்திருந்தார்.
நாடு முழுவதும் 10 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன் பெறும் வகையில் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி, ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படும். இத்திட்டத்தில் சுமார் 50 கோடி மக்கள் பயனடைவார்கள். மேலும் இத்திட்டம் உலகிலேயே மிகப்பெரிய மருத்துவத்திற்கான நிதி ஒதுக்கீடு திட்டம் ஆகும்" என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அக்டோபர் 2ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்திட்டத்தில் பயன் பெற பயனாளிகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையில் பயனாளிகளின் உண்மையான விவரங்கள் இருக்கும் என்பதால், வருமானத்தைக் குறைத்துக்கொண்டு யாரும் இந்தத் திட்டத்தின் மூலமாகப் பயன் பெறக் கூடாது என்பதற்காக இந்த உத்தரவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் தலா 5 லட்சம் ரூபாய் வரை செலவிடப்படும் என்பதால், பல ஆயிரம் கோடி ரூபாய் இந்தத் திட்டத்தில் செலவு செய்யப்படுகிறது எனவே இதில் அதிகாரிகள் எந்தவிதமான முறைகேட்டிலும் ஈடுபடக்கூடாது என்பதற்காகவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.