பங்குச் சந்தை முதலீட்டுக்கும் இனி ஆதார்! மத்திய அரசு ஆலோசனை
கருப்புப் பணத்தை முற்றிலும் ஒழிக்கும் விதமாக இனிமேல் பங்குச் சந்தை மற்றும் பரஸ்பர நிதி முதலீட்டுக்கும் ஆதார் அவசியம் என்னும் சட்டம் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடுகள் செய்வதற்கு ஆதார் எண் விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது.
பதுக்கப்பட்டுள்ள கருப்புப்பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் ஆதார் எண்ணை பங்குச் சந்தை பரிவர்த்தனைகளோடு இணைப்பது தொடர்பாக மத்திய அரசும் செபி அமைப்பும் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒரு பொதுவான அடையாளம் வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டதுதான் ஆதார் அடையாள அட்டை.
ஆதாரின் அவசியம்
மத்திய அரசு முதலில் ஆதார் அடையாள அட்டையை வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு அவசியம் என்று வலியுறுத்தியது. பின்னர் ஆதார் அட்டையை கேஸ் இணைப்பிற்கு கட்டாயம் என்று சொன்னது. அப்படி ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் கேஸ் இணைப்பு கிடையாது என்று அடுத்த பிடியை இறுக்கியது. உடனே கேஸ் இணைப்பு வைத்துள்ள அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை கேஸ் நிறுவனங்களுக்கு அளித்தனர்.
பான் கார்டு ஆதார் எண்
பின்னர், ஆதார் அடையாள அட்டையை பான் கார்டு உடன் கட்டாயம் இணைக்கவேண்டும் என்று வலியுறுத்தியது. அப்படி பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வருமான வரித்தாக்கல் செய்ய முடியாது என்று பெரிய குண்டைத் தூக்கிப்போட்டது.
வருமானவரி தாக்கல்
உடனே வருமான வரித்தாக்கல் செய்யும் அனைவரும் அடித்துப் பிடித்து தங்களின் ஆதார் எண்ணை பான் கார்டு எண்ணுடன் இணைத்துவிட்டு அதன் பின்பே தங்களின் வருமான வரியை தாக்கல் செய்தனர்.
ஒருவழியாக எல்லாம் முடிந்தது என்று எல்லோரும் அக்கடா என்று உட்காரும்போது, மத்திய அரசு புதிதாக ஒரு விதிமுறையை கொண்டுவரப்போவதாக செய்தி உலாவருகின்றது.
பங்குச்சந்தை முதலீடு
அது என்னவென்றால், இனிமேல் பங்குச் சந்தையிலும் பரஸ்பர நிதியிலும் முதலீடு செய்வதாக இருந்தால் ஆதார் எண்ணை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்பது. ஆதார் எண்ணை சமர்ப்பிக்கவில்லை என்றால் இனிமேல் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முடியாது.
கருப்பு பணம் முடக்கம்
கருப்புப் பொருளாதாரம் மற்றும் கள்ள பணநடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் அளவிலான கருப்புப்பணம் முடக்கப்பட்டது.
பங்குச்சந்தை முதலீட்டுக்கு ஆதார்
இருந்தாலும், கருப்புப்பண முதலைகள் வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணப்பரிமாற்றங்களின் மூலமாக பங்குச் சந்தையிலும் பரஸ்பர நிதியிலும் முதலீடு செய்வதற்கான சாத்தியம் இருப்பதால், அதனையும் ஒழிப்பதற்காக இனிமேல் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது தங்களின் டீமேட் கணக்குடன் ஆதார் எண்ணையும் கட்டாயம் இணைக்கவேண்டும் என பங்குச் சந்தைகள் கட்டுப்பாட்டு வாரியம் (Securities and Exchange Board of India) வலியுறுத்தும் என்று தெரிகிறது. இதற்கான முறையான உத்தரவு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.