ஆதாருடன் பான் கார்டை மார்ச் 31,2019 வரை இணைக்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க அடுத்தாண்டு மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டித்துள்ளது மத்திய அரசு.
டெல்லி: ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க 2019ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட பயன்களும், நாட்டின் அனைத்து அடித்தட்டு மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், கடந்த 2009ம் ஆண்டில் ஆதார் எண் திட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் படிப்படியாக அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தங்கள் வங்கிக்கணக்கையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வலியுறுத்தியது.
மத்திய நேரடி வரிகள் வாரியமும் (Central Board of Direct Taxes-CBDT), ஆதார் எண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 2016-17ம் ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் அனைவரும் தங்களின் பான் எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்காவிட்டால் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் அறிவுறித்தியது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த 2017-18ம் நிதியாண்டில் கொண்டு வந்த சட்ட திருத்தத்தின்படி, வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யும்போது, ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்து, வரி ஏய்ப்பு செய்வதைத் தடுப்பது நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது. எனவே, பான் எண் வைத்திருப்போர் அனைவரும், தங்கள் ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும்" என்று மத்திய வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆதார் அட்டைக்கு சட்ட பூர்வமான அங்கீகாரம் உள்ளதா? என்பது தொடர்பான பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.
முன்னதாக பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் 2017 ஜூலை 31 வரை வழங்கப்பட்டது. பின் அது ஆகஸ்ட் 31 வரையிலும் அதன் பின் டிசம்பர் 31 வரையிலும் தொடர்ந்து இந்தாண்டு மார்ச் 31 வரை என நான்கு முறை நீட்டிக்கப்பட்டிருந்தது. கடைசியாக 30-6-2018 வரை தேதி நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. இந்நிலையில் தற்போது ஐந்தாவது முறையாக, அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி (31-3-2019) வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைக்க முட்டுக்கட்டையாக இருப்பது பெரும்பாலும், பான் எண் மற்றும் ஆதார் எண்ணில் இருக்கும் பிறந்த தேதிகளில் உள்ள வித்தியாசமே. இதன் காரணமாகவே பெரும்பாலானவர்கள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதில் கால தாமதம் செய்து வருகின்றனர். கூடவே, ஆதார் தகவல்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியாக பரபரப்பை உண்டாக்கி உள்ளதால், பெரும்பாலானவர்கள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதில் தயக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
தனி நபர் வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஜூலை 31ம் தேதியே கடைசி தேதி என்ற சூழலில், ஆதார் எண் மற்றும் பான் எண் இணைப்பிற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.