ஜிஎஸ்டியில் ஆடி ஆஃபர்: நாப்கின்களுக்கு முழு விலக்கு - விலை குறையும் பொருட்கள் எவை எவை?
பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு 12 சதவிகித ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து பூரண விலக்கு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சென்னை: பெண்களின் குரலுக்கு ஒருவழியாக மத்திய அரசு செவிசாய்த்துள்ளது. சானிடரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பளிங்கு, மரம் மற்றும் கற்களால் செய்த சாமி சிலைகளுக்கும், தங்கத்திலான மற்றும் நவரத்தின கற்கள் பதிக்கப்படாத ராக்கி கயிறுகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஒரே தேசம் ஒரே வரி என்ற முழக்கத்துடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதியன்று ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் ஆடி மாத ஆஃபராக பல பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரிகள் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு குழுவின் 28வது கூட்டம் டெல்லியில் இடைக்கால நிதி அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநிலங்களை சேர்ந்த நிதி அமைச்சர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் 46 திருத்தங்களுடன் பல்வேறு பொருட்களுக்கு வரிவிதிப்பில் சலுகை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாதந்தோறும் ஜிஎஸ்டி
5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்பவர்கள் இனி காலாண்டுக்கு பதிலாக மாதந்தோறும் ஜிஎஸ்டி வரியை செலுத்த வேண்டும். இறக்குமதி செய்யப்படும் யூரியா உரத்துக்கான வரி 5 சதவீதமாக குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுடன் கூடிய 46 பரிந்துரைகள் நேற்றைய கூட்டத்தில் முன் வைக்கப்பட்டுள்ளன.
28%லிருந்து 18% குறைப்பு
68 சென்ட்டி மீட்டர்கள் வரையிலான தொலைக்காட்சி பெட்டிகள். லித்தியம் இயான் பேட்டரிகள், வேக்கம் கிளீனர்கள், அறைவை இயந்திரங்கள், மிக்சி, வாட்டர் ஹீட்டர்கள், தலை, கைகளுக்கான டிரையர்கள், பெயிண்ட், வார்னீஷ், நறுமணப் பொருட்கள், குளியலறை ஸ்பிரே, ஏ.சி., ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின்கள், டிரைலர்கள் மற்றும் வீடியோ கேம்ஸ் சாதனங்களுக்கான வரி 28லிருந்து 18 சதவிகிதமாக இனி குறைக்கப்படும்.
18%லிருந்து 12 சதவிகிதமாக குறைப்பு
பர்சுகள், நகைப்பெட்டிகள், ஹேண்ட் பேக்குகள், கண்ணாடி மற்றும் புகைப்பட பிரேம்கள், அலங்கார பிரேம்கள், மண்ணெணை அடுப்பு, இரும்பு அலங்கார பொருட்கள் 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
சவுரிமுடிக்கு 5%
யூரியா உரம், எத்தனால், திட உயிரி எரிபொருள் குண்டுகள், கையால் நெய்யப்பட்ட தரை விரிப்புகள், கையால் தயாரிக்கப்பட்ட சவுரி முடிகள், கோரைப்புற்களை கொண்டு கையால் தயாரிக்கப்பட்ட பொருட்கள். ரூ.1000 வரை மதிப்புள்ள ஷூக்களுக்கு 5 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது. முன்னர் ரூ.500 வரை மதிப்புள்ள ஷூக்களுக்கு 5 சதவிகிதம் இருந்தது.
முழு வரி விலக்கு
பளிங்கு, மரம் மற்றும் கற்களால் செய்த சாமி சிலைகளுக்கும், தங்கத்திலான மற்றும் நவரத்தின கற்கள் பதிக்கப்படாத ராக்கி கயிறுகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு 12 சதவிகித ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து பூரண விலக்கு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 27 முதல் அமல்
இந்த அம்சங்கள் அனைத்தும் வரும் 27ஆம் தேதி முதல்அமலுக்கு வரும் என நிதி அமைச்சர் பியுஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அடுத்த ஜிஎஸ்டியின் கூட்டம் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.