புதிய ரூ. 200, ரூ.50 வந்தாச்சு ... டிசம்பரில் மீண்டு(ம்) வருகிறது புது 1000 ரூபாய்
கடந்த நவம்பரில் வாபஸ் பெறப்பட்ட 1000 ரூபாய் நோட்டுக்களை டிசம்பரில் மீண்டும் புதிய வடிவில் வெளியிட மத்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி: புதிதாக 50ரூபாய் மற்றும் 200 ரூபாய் வெளியீட்டிற்கு பின்பு வரும் டிசம்பரில் மீண்டும் புதிய வடிவில் 1000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட மத்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் காரணமாக 500 மற்றும் 1000 ஆகிய உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் மத்திய அரசால் செல்லாதாக அறிவிக்கப்பட்டன.
இதனை அடுத்து நாட்டில் ஏற்பட்ட பணத் தட்டுப்பாட்டை போக்குவதற்காக உடனடி நிவாரணமாக புதிதாக 500 மற்றும் 2000 போன்ற உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து புழக்கத்திற்கு விடப்பட்டன.
பணத்தட்டுப்பாடு
ஓரளவு பணத்தட்டுப்பாடு நீங்கினாலும், 50 மற்றும் 100 போன்ற குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் மக்களுக்கு கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது
2000 ரூபாய் நோட்டு
புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்டாலும், குறைந்த மதிப்புடைய நோட்டுக்களை அச்சிட்டு வெளியிடுவது பற்றி ரிசர்வ் வங்கி சிந்திக்கத் தொடங்கியது.
புதிய ரூபாய் நோட்டுக்கள்
சில இடங்களில் 5 முதல் மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் வாங்குவதற்கு இடைத்தரகர்கள் கமிஷன் பெற்றுக்கொண்டு மிகவும் பழைய 5 முதல் 100 ரூபாய் நோட்டுக்களை தந்தனர். பொதுமக்களின் சிரமங்களை போக்குவதற்காக ரிசர்வ் வங்கியும் போர்க்கால நடவடிக்கை எடுத்து குறைந்த மதிப்புடைய நோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்திற்கு விட்டது.
50 ரூபாய் நோட்டு
இதன் விளைவாக புதிதாக 50 முதல் 200 ருபாய் வரையில் புதிய வடிவில் குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து புழக்கத்திற்கு விடப்படும் என்றும் அப்போது மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
புதிய 200 ரூபாய்
அதனை உறுதிப்படுத்துவது போலவே கடந்த வாரம் புதிய வடிவிலான 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்கள் மக்களின் புழக்கத்திற்கு விடப்பட்டன. இதில் 200 ரூபாய் நோட்டுக்கள் அச்சிட்டு வெளியிட்டது இந்தியாவிற்கு முதல் மற்றும் புதிய அனுபவமாகும்.
ஏடிஎம்களில் மாற்றம்
50 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு விடப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தாலும், அவை முதலில் அனைத்து வங்கிகளின் கிளைகளில் மட்டுமே கிடைக்கும். ஏனென்றால், தற்போது இருக்கும் ஏடிஎம்கள் அனைத்தும் 100, 500 மற்றம் 2000 ரூபாய் நோட்டுக்களை நிரப்புவதற்கு ஏற்ற வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.
விரைவில் கிடைக்கும்
புதிதாக 200 ரூபாய் நோட்டுக்களை நிரப்புவதற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைப்பதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும். எனினும் வெகு விரைவில் 200 ரூபாய் நோட்டுக்களும் அனைத்து ஏடிஎம்களிலும் கிடைப்பதற்கு ஏற்ற வகையில் அனைத்து ஏடிஎம்களும் போர்க்கால அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன
மீண்டும் வரும் 1000 ரூபாய்
இந்நிலையில், வரும் டிசம்பர் மாதத்தில் புதிதாக 1000 ரூபாய் நோட்டுக்களை புதிய வடிவில் அச்சடித்து வெளியிடப்பபோவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்மூலம் 500 மற்றும் 2000 ரூபாய்க்கும் நடுவே உள்ள இடைவெளியை போக்கும் என்று தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்
புதிதாக புழக்கத்திற்கு வரவிருக்கும் 1000 ரூபாய் நோட்டுக்களில் முற்றிலும் புதிய வடிவில் பாதுகாப்பு அம்சங்களும் வடிவங்களும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் 1000 ரூபாய் நோட்டுக்களும் மைசூரு மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சல்போனியிலும் அச்சடிப்பதற்கு தயார் நிலையில் உள்ளது.
நவம்பரில் போய் டிசம்பரில் வருது
புதிய 1000 ரூபாய் நோட்டுக்கள் வரும் டிசம்பர் மாத தொடக்கத்திலேயே அச்சடித்து புழக்கத்திற்கு விடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.