அப்போ அமெரிக்கா... இப்போ சிங்கப்பூர்... வேலைக்கான விசா தருவதில் கெடிபிடி
இந்திய ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிய வருபவர்களுக்கு விசா தர மாட்டோம் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: அமெரிக்காவைத் தொடர்ந்து சிங்கப்பூரும் இந்தியர்களுக்கான வேலைக்கான விசா தருவதில் கெடுபிடி காட்டத்தொடங்கியுள்ளதால், இந்திய ஐடி துறையில் வேலையை எதிர்நோக்கியுள்ள இளைஞர்களை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. சிங்கப்பூர் அரசு விசா வழங்க மறுப்பதால் டி.சி.எஸ். மற்றும் ஹெச்.சி.எப். நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் ஐடி நிறுவனங்களில் வேலைபார்க்கும் இளைஞர்கள், வேலை விஷயமாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சிங்கப்பூருக்கும் வேலைக்கான விசாவில் செல்வது வழக்கம். இந்த நடைமுறை முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா இருந்த வரைக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக சென்றுவந்தனர்.
ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று அதிபரான பின்பு இந்த நடைமுறைக்கு வேட்டு வைக்க ஆரம்பித்தார்.
டிரம்ப் எபெக்ட்
அதாவது, அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களில் அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துவதில் முன்னுரிமை தரப்போவதாகவும், இதனால், மற்ற நாட்டிலிருந்து ஹெச் 1பி வேலை விசாவில் அமெரிக்காவிற்கு வருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றும் தடாலடியாக அறிவித்தார்.
மேலும், அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் கண்டிப்பாக அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்த முன்னுரிமை காட்டவேண்டும் என்றும் முழக்கமிட்டார்.
இந்திய இளைஞர்களுக்கு சிக்கல்
இதனால், இந்தியாவில் உள்ள அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகின. ஏன் என்றால், அமெரிக்காவில் கிளை பரப்பி உள்ள பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்கள் நாட்டிலிருந்துதான் ஹெச்1பி வேலை விசாவில் அமெரிக்காவிற்கு ஆட்களை அனுப்பி வந்தனர்.
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை
டிரம்ப்பின் அறிவிப்பிற்கு பின்பு, அமெரிக்காவிற்கு அனுப்புவதை நிறுத்திவைத்துள்ளனர். அதே நேரத்தில் இந்திய இளைஞர்கள் வேலை தேடி தங்கள் நாட்டுக்குள் வந்தால், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் பல நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர் அறிவிப்பு
இந்நிலையில், தற்போது அமெரிக்காவைத் தொடர்ந்து, சிங்கப்பூரும் தங்கள் நாட்டில் கிளைகளைக் கொண்டுள்ள வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிங்கப்பூர் வாசிகளை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளது.
விசா கெடுபிடி
மேலும், சிங்கப்பூருக்கான விசா அதிகாரிகளும், இந்தியர்களுக்கு விசா கொடுப்பதில் கெடுபிடி காட்டத் துவங்கிவிட்டனர். விசா வேண்டி விண்ணப்பித்தவர்களிடம் பொருளாதார தேவை சோதனை என்னும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருமாறு வற்புறுத்துகின்றனர்.
கைகழுவும் நிறுவனங்கள்
இந்த நடைமுறை தேவையில்லை என்று விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (Comprehensive Economic Cooperation Agreement-CECA) தெளிவாக விளக்கி இருந்தாலும், சிங்கப்பூர் விசா அதிகாரிகள் கெடுபிடி காட்டுகின்றனர். இதனைத் தொடர்ந்து இந்திய ஐடி நிறுவனங்கள் சிங்கப்பூரை கை கழுவி விட்டு, தங்களுக்கு தோதான நாட்டைத் தேடத் தொடங்கிவிட்டன.
வெளியேறும் நிறுவனங்கள்
சிங்கப்பூரில் டி.சி.எஸ்.,விப்ரோ, இன்போடெக், எல்அண்ட்டி உள்பட பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களை வெளியேறுமாறு சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே டி.சி.எஸ். மற்றும் ஹெச்.சி.எப் ஆகிய ஐ.டி. நிறுவனங்கள் சிங்கப்பூரில் இருந்து வெளியேறி விட்டன. இன்போசிஸ், விப்ரோ, இன்போடெக் போன்ற நிறுவனங்களும் சிங்கப்பூரில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளன. இதனால் இந்திய ஐ.டி. ஊழியர்களுக்கு பாதிப்பும் பின்னடைவும் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் முடிவு
சிஇசிஏ ஒப்பந்தத்தை சிங்கப்பூர் மீறுவதால், இந்தியாவும் தங்களின் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய முடிவெடுத்துள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரியினை குறைக்க முடிவெடுத்துள்ளது. இல்லை என்றால், தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையும், வங்கித்துறையும் பாதிப்புக்கு உள்ளாகும்.