தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கான அதிகபட்ச வயது வரம்பு 65 ஆக அதிகரிப்பு
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் பயன்களை பெறுவதற்கான வயது வரம்பு 60 வயதில் இருந்து 65 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ஓய்வூதிய திட்டத்தின் பயன்களை பெறுவதற்கான வயது வரம்பை 60 வயதில் இருந்து 65 வயதாக அதிகரித்து ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
மாதச் சம்பளம் வாங்குபவர்கள் தாங்கள் வேலையில் இருந்து ஓய்வு பெறும்போது அவர்களுக்கு பெரிதும் கை கொடுப்பது தேசிய ஓய்வூதியத் திட்டம்தான்.
மத்திய அரசுப் பணியில் இருப்பவர்கள் இந்த ஓய்வு கால பயன்பாட்டை பெற்று வந்தாலும், தனியார் துறையில் பணி புரிபவர்களுக்கு இந்த திட்டத்தின் பயன் கிடைக்காமல் இருந்து வந்தது. அவர்களின் கவலையைப் போக்கும் விதமாக, அவர்களையும் இந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைப்பதற்கு கடந்த ஆண்டு முயற்சி எடுத்தது.
தேசிய ஓய்வூதிய திட்டம்
இதன் விளைவாக குறைந்த வருமானம் பெறும் அனைவரும் பயன்பெறும் வகையில் அவர்களும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (National Pension Scheme) இணைவதை ஊக்குவிக்கும் விதமாக வருடாந்திர குறைந்த பட்ச பங்களிப்பு தொகையை (Employees Annual Contribution) 6000 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக கடந்த வருடம் மத்திய அரசு குறைத்தது.
புதிய அறிவிப்பு
இந்த திட்டம் அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றதால், இத்திட்டத்தை மேலும் விரிவு படுத்தும் நோக்கத்தில் ஓய்வூதிய நிதி ஓழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தற்போது மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வயது வரம்பு அதிகரிப்பு
ஆம், தற்போது தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான குறைந்த பட்ச வயது வரம்பு 18 ஆகவும் அதிக பட்ச வயது வரம்பானது 60 வயதாகவும் உள்ளது. இதில் அதிக பட்ச வயது வரம்பை 60ல் இருந்து 65 வயதாக அதிகரிக்கத்துள்ளது.
65 வயதுவரை இணையலாம்
இதுபற்றி கருத்து தெரிவித்த ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் ஹேமந்த் காண்ட்ராக்டர், தற்போது தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான வயது வரம்பு 18 முதல் 60 வயது வரையில் உள்ளது. இதனை 65 வயது வரையில் அதிகரிக்க எங்களின் நிர்வாகக் குழு முடிவெடுத்துள்ளது. ஆயினும், ஓய்வூதியப் பயனை அதிக பட்சமாக பெறும் வகையில், தாங்களாகவே விரும்பி 70 வயது வரையிலும் தங்களின் பங்களிப்பை (Contribution) அளிப்பதற்கு நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கூட்டுவட்டி
மேலும், இதனால் எங்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் அது மிக மிகக் குறைவுதான். ஆனால், அதே சமயத்தில் 25 முதல் 30 வருடங்களில் கிடைக்கும் பயன்பாடு (Returns) என்பது 15 முதல் 16 சதவிகிதம் வரையிலும் அதிகமாக இருக்கும். இவை எல்லாமே கூட்டு வட்டி என்னும் மந்திரச் சொல் ஆகும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.
ஓய்வூதிய ஒழுங்குபடுத்தும் குழு
தற்போது இந்தியாவில் 15 சதவிகித ஊழியர்கள் மட்டுமே ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ளனர். மீதமுள்ள 85 சதவிகிதம் பேர் முறைசாரா தொழில் செய்துவருகின்றனர். அவர்களையும் ஓய்வூதியத் திட்டத்தில் இணைப்பதுதான் எங்களுடைய நோக்கம் என்று ஓய்வூதிய ஒழுங்குபடுத்தும் குழு தெரிவித்துள்ளது.