ஹாலிடேக்கு சீக்கிரம் விமான டிக்கெட் புக் பண்ணிடுங்க – இல்லைன்னா ரொம்ப கஷ்டமாம்!
சென்னை: இந்த வருடம் விடுமுறை தினங்களுக்கு சீக்கிரமே விமான டிக்கெட்டுகளை புக் செய்து விடுங்கள். ஏனெனில், விரைவில் விமான கட்டணம் உயரக் கூடும் என்ற செய்தி இணையதளங்களில் பரபரப்பாக உலா வருகின்றது.
இந்தவருடம் கடந்த ஆண்டை விட விமான எரிபொருளின் விலை 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஆனால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 80 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு விமான பயணக்கட்டணம் உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் 500 ரூபாய் கட்டணத்தில் முன்பதிவு சலுகைகளை அறிவித்து பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய பல விமான நிறுவனங்கள் தற்போது கட்டணத்தை உயர்த்தி வருகின்றன.
உதாரணமாக உள்நாட்டு விமான சேவையில் முன்ணியில் இருக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கோடை விடுமுறை காலங்களில் 35 போயிங் விமானங்களை இயக்கி வந்தது. ஆனால், தற்போது 20 விமானங்களை மட்டுமே இயக்கி வருகிறது.
கோடை விடுமுறையின்போது 345 விமானங்களை தினமும் இயக்கி வந்த நிலையில் தற்போது 100 க்கும் குறைவான விமானங்களையே இயக்கி வருகிறது.
இதனால், இருக்கைகள் கிடைப்பது என்பது கடும் கிராக்கி ஆகிவிட்டது. இதையடுத்து, கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையுயர்வு கோடை விடுமுறை வரை தொடர வாய்ப்புள்ளதாக யாத்ரா.காம் இணையதளம் தெரிவித்துள்ளது.
குறைவான விமானங்கள் இயக்கப்பட சப்ளை மற்றும் டிமாண்ட் ஆகியவற்றில் காணப்படும் சீரற்ற தன்மையே காரணம் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.