அமேசானில் கிரேட் இந்தியன் சேல்... பொருட்களை அள்ளிய விருதுநகர் மக்கள்!
கிரேட் இந்தியன் சேல் என்ற பெயரில் அமேசான் நிறுவனம் வழங்கிய மூன்றுநாள் சிறப்புச் சலுகை விற்பனை திட்டத்தில் விருதுநகர் மக்கள் அதிக அளவில் பொருட்களை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
சென்னை: தேசிய கொடியில் மிதியடி, காந்தியை செருப்பில் போட்டு சர்ச்சை ஏற்படுத்திய அமேசான் நிறுவனம் இந்தியாவில் கிரேட் இந்தியன் சேல் என்ற பெயரில், ஜனவரி 20 முதல் 22ஆம் தேதி வரையிலான தள்ளுபடி விலையில் மூன்று நாள் சிறப்புத் திட்டத்தை அறிவித்தது.
இத்திட்டம் ஞாயிறன்று முடிவடைந்த நிலையில், அதிகமான புதிய வாடிக்கையாளர்கள் அமேசான் தளத்தில் இணைந்து பொருட்களை வாங்கியுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிரேட் இந்தியன் சேல் என்ற பெயரில் அமேசான் நிறுவனம் வழங்கிய மூன்றுநாள் சிறப்புச் சலுகை திட்டத்தில் விருதுநகர், சாம்பல்பூர் உள்ளிட்ட மூன்றாம் தர நகரங்களில் அதிகமான புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்ததோடு, அதிக லாபத்தையும் ஈட்டியுள்ளது என்று அமேசான் இந்தியா நிறுவன துணைத் தலைவர் அமித் அகர்வால் கூறியுள்ளார்.
குறிப்பாக பாட்டியாலா (1,084%), விருதுநகர் (630%), சாம்பல்பூர் (475%), கோலாப்பூர் (400%) உள்ளிட்ட நகரங்களில் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், தீபாவளி மற்றும் புத்தாண்டில் விற்பனையாகும் பொருட்களைவிட இந்த மூன்று நாட்களில் நாள் ஒன்றுக்கு 200 சதவிகிதம் கூடுதலான அளவில் பொருட்கள் விற்பனையாகியுள்ளன.
டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கான எங்களது ’அமேசான் பிரைம்’ மற்றும் ’அமேசான் பே’ ஆகிய செயலிகள் மூலமாக அதிகப்பேர் பொருட்களை வாங்கியுள்ளனர் என்று அமித் அகர்வால் கூறியுள்ளார்.