இந்தியாவில் ரூ. 1100 கோடியை கொட்டும் இன்டல்.. 3000 பேருக்கு வேலை.. ! #intel
பெங்களூரு: ஐடி நிறுவனங்களில் ஆள் குறைப்பு தலைவிரித்தாடி வரும் நிலையில் இன்டல் நிறுவனம் பெங்களூரில் ரூ. 1100 கோடி முதலீட்டில் பிரமாண்ட ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தை நிறவவுள்ளது. இதன் மூலம் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
வேலையிழப்பும், ஆள் குறைப்பும்தான் ஐடி ஊழியர்களிடையே தற்போது பரபரப்பான பேச்சாக உள்ளது. இந்த நிலையில் ரூ. 1100 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது இன்டல். பெங்களூரில் இந்த பெரிய முதலீடை அது செய்யவுள்ளது.
பெங்களூரில் அதி நவீன ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தை ரூ. 1100 கோடி முதலீட்டில் நிர்மானிக்கப் போவதாக இன்டல் அறிவித்துள்ளது. இதன் மூலம் 3000 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.
1999க்கு பிறகு
1999ம் ஆண்டு இன்டல் நிறுவனண் இந்தியாவில் ரூ. 28,000 கோடியை முதலீடு செய்து தனது பணிகளைத் தொடங்கியது. அதன் பிறகு தற்போதுதான் மிகப் பெரிய முதலீட்டை அது இந்தியாவில் கொண்டு வருகிறது. மேலும் பெங்களூரில் உள்ள தனது பணிகள் அனைத்தையும் அது ஒரே கட்டமைப்பு அலுவலகத்தின் கீழ் கொண்டு வரவும் உள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாதான்
அமெரிக்காவைச் சேர்ந்த இன்டல் நிறுவனம் அமெரிக்காவுக்கு அடுத்து அதிக அளவில் முதலீடு செய்துள்ளது இந்தியாவில்தான். அமெரிக்காவுக்கு அடுத்து இங்கு மட்டும்தான் அதன் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ஜாபூர் ரிங் ரோட்டில்
பெங்களூரு சர்ஜாபூர் ரிங் ரோட்டில் உள்ள இன்டல் நிறுவனத்திற்குச் சொந்தமான 44 ஏக்கர் நிலத்தில் புதிய திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. 13 மாதங்களில் இந்த மையம் செயல்பாட்டுக்கு வரும்.
கர்நாடக அரசின் சாதனை
உண்மையில் கர்நாடக அரசின் சாதனையாகவே இது பார்க்கப்படுகிறது. ஐடி கடும் தடுமாற்றத்தை சந்தித்து வரும் நிலையில் இன்டல் நிறுவனம் தனது புதிய முதலீட்டை கொண்டு வருவதற்கு சாதகமான முறையில் கர்நாடக அரசும் நடந்து கொண்டுள்ளது. இதனால்தான் இன்டல் புதிய முதலீட்டை அறிவித்துள்ளதாக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.