தமிழக பால் சந்தையை குறிவைக்கும் அமுல் பால்: சமாளிக்குமா? ஆவின் பால்?
குஜராத்தைச் சேர்ந்த அமுல் நிறுவனம் தமிழகத்தில் பால் விற்பனையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இது ஆவின் பால் விற்பனைக்கு கடும் போட்டியை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
டெல்லி: தமிழகத்தின் பால் சந்தையை நோக்கி தன் பார்வையை திருப்புகிறது அமுல் பால். பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் அகில இந்திய அளவில் பிரபலமான அமுல் நிறுவனம் விரைவில் தமிழ்நாட்டிலும் பால் விற்பனையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தமிழக அரசின் ஆவில் பால் விற்பனையை பாதிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.
குஜராத் மாநிலத்தின் பால் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு ( GCMMF). இந்தக் கூட்டமைப்பானது பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்வதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் அமுல்.
அமுல் நிறுவனம்
அமுல் நிறுவனம் பால் விற்பனையை குஜராத் மாநிலத்திலும், பால் துணைப் பொருட்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகின்றது. கடந்த 2016-17ம் நிதி ஆண்டில் இந்நிறுவனம் பால் பொருட்களின் விற்பனையின் மூலம் 27ஆயிரம் கோடி ரூபாய் இலக்கை எட்டிய அமுல் நிறுவனம், வரும் 2020ம் ஆண்டிற்குள் 50ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை இலக்கை நிர்ணயித்துள்ளது.
பால் விற்பனை
அந்த விற்பனை இலக்கை எட்டும் முயற்சியில் அமுல் நிறுவனம் பிற மாநிலங்களிலும் விற்பனையை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றது. அதன் முதல் கட்டமாக தற்போது ஆந்திராவில் பாக்கெட் பால் விற்பனையை துவக்கி உள்ளது. இதனை அடுத்து தமிழகத்திலும் பாக்கெட் பால் விற்பனையை துவக்கத் திட்டமிட்டுள்ளது.
பாக்கெட் பால் விற்பனை
வெண்மை புரட்சி ஏற்பட்ட பின்னர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் பாக்கெட் பால்தான் 90 சதவிகிதம் விற்பனை செய்யப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து பாக்கெட் பால் தமிழகத்திற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தமிழகத்தில் பால் விற்பனையில் தற்போது முன்னனி விற்பனை நிறுவனமாக ஆவின் நிறுவனம் இருந்து வருகின்றது.
ஆவின் பால்
தனியார் நிறுவனங்கள் பல இருந்தாலும், ஆவின் நிறுவனமே ஏகபோக சக்ரவர்த்தியாக இருந்து பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்து பதப்படுத்தி விற்பனை செய்துவருகின்றது. சில சமயங்களில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யாமல் தவிர்த்து விடுவதால், பால் உற்பத்தியாளர்கள் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்து, பாலை சாலைகளில் கொட்டி எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.
பாலில் கலப்படம்
மேலும், கடந்த ஆண்டு பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்தது தெரிய வந்ததால், ஆவின் பால் நுகர்வோர் கடும் விரக்தியில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆவின் பால் வாங்குவதை தவிர்த்து வேறு தரமான பால் வாங்குவதற்கு துவங்கிவிட்டனர்.
அமுல் பாலுக்கு மாற வாய்ப்பு
தற்போதைய சூழ்நிலையில் அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் கால் பதிக்குமானால், அது பால் உற்பத்தியாளர்களின் வயிற்றில் பால் வார்க்கும் என்பது நிச்சயம் ஆகும். தமிழகத்தில் அமுல் பால் விற்பனைக்கு வருமானால், பெரும்பாலான ஆவில் பால் நுகர்வோர் அமுல் பால் வாங்குவது நிச்சயம்.
விரைவில் விற்பனை
குஜராத் தவிர இதர மாநிலங்களிலும் அமுல் பால் விற்பனை செய்வதற்கான சாத்தியக் கூறுகளை தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். தற்போது முதல் கட்டமாக ஆந்திராவில் பாக்கெட் பால் விற்பனையை துவக்கி உள்ளோம். இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் அடுத்த ஆண்டு முதல் பாக்கெட் பால் விற்பனையை தொடங்க உள்ளோம் என்று அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.சோதி கூறியுள்ளார்.
அமுல் விற்பனை நிலையங்கள்
அமுல் நிறுவனத்தின் பால் மற்றும் அதன் துணைப்பொருட்கள் அனைத்துமே விலை அதிகமாகும். இருந்தாலும் அதன் தரம் மற்றும் சுவைக்காகவே வாங்குபவர்கள் அதிகமாக உள்ளனர். இதனை உணர்ந்தே இந்நிறுவனம் தமிழ்நாட்டில் பால் விற்பனை செய்வதற்கு முன்னோட்டமாக, சென்னையில் சில இடங்களில் நேரடியாக பால் பொருட்கள் விற்பனை நிலையங்களை துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.