இ வே பில்லால் எகிறிய ஜிஎஸ்டி வரி வசூல்: ஏப்ரல் மாதத்தில் ரூ. 1 லட்சம் கோடி
ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது.
டெல்லி: இ-வே பில் அறிமுகப்படுத்தப்பட்டதால், ஏப்ரல் மாதத்திய ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது.
பல முனை வரிகளான வாட் வரி, கலால் வரி, சுங்க வரி, நுழைவு வரி (Entry Tax) பொழுது போக்கு வரி என பலதரப்பட்ட வரி முறைகளாக இருந்த வரி விவிதிப்பு முறையை முற்றிலும் ஒழித்துவிட்டு, அதற்கு மாற்றாக ஒரே தேசம் ஒரே வரி (One Nation One Tax) என்ற முழக்கத்துடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது.
வாட் வரி விதிப்பு முறையில் மாதாந்திர ரிட்டன்கள் அனைத்தும் எளிய முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்ததால் வர்த்தகர்களும், தொழில் துறையினரும் மிக எளிதில் மாதாந்திர ரிட்டன்களையும், வரிகளையும் தாக்கல் செய்து வந்தனர். ஆனால் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் மூன்று விதமான ரிட்டன்கள் இருந்தாலும் அனைத்தும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில் கடினமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில், மூன்று விதமான ரிட்டன்கள் உள்ளதால் வர்த்தகர்களும், தொழில துறையினரும் ரிட்டன்களையும் புரியாமல் தாக்கல் செய்து வந்ததால் தொடக்கத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் அதிரடியாக 95000 கோடி ரூபாய் என்று உச்சத்தை தொட்டு சாதனை படைத்தது. கூடவே உள்ளீட்டு வரி வருவாயை எப்படி பயன்படுத்துவது என்பதில் குழப்பம் நிலவியதாலும், ஜிஎஸ்டி வரி வசூல் அதிகமாக இருந்தது.
வர்த்தகர்க நிறுவனங்களும், தொழில துறையினரும், பின்னர் வந்த மாதங்களில் ஜிஎஸ்டி வரி முறைகளை ஓரளவு புரிந்து கொண்டு மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்து வந்ததால் ஜிஎஸ்டி வரி வசூல் சரியத் தொடங்கியது. கூடவே, மாநிலங்களுக்கு இடையே சரக்கு பரிமாற்றத்திற்கு தேவையான ஆவணங்கள் இல்லாததாலும், ஜிஎஸ்டி வரி வசூல் சரிவை சந்தித்தது.
ஜிஎஸ்டி வரி வசூலானது ஆகஸ்டு மாதத்தில் 92,609 என மளமளவென சரியத் தொடங்கி படிப்படியாக நவம்பர் மாதத்தில் 80,808 கோடி ரூபாய் என்று பாதாளத்திற்கு சென்றது. மத்திய அரசு மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு பரிமாற்றத்திற்கு இ-வே பில் என்னும் இணையவழி ரசீது முறையை விரைவில் அமல்படுத்தும் என்று நம்பிக்கை அளித்ததால், ஜிஎஸ்டி வரி வசூல் சற்று அதிகரிக்கத் தொடங்கியது.
மத்திய அரசு நம்பிக்கையூட்டும் வகையில் உத்தரவாதம் அளித்ததால், டிசம்பர் மாதத்தில் 86,703 கோடி ரூபாயும் ஜனவரி மாதத்தில் 86,318 கோடி ரூபாயும் வசூலாகி மத்திய அரசுக்கு சற்று மகிழ்ச்சியளித்தது. ஆனால், சரக்கு பரிமாற்றத்திற்கு உதவும் இ-வே பில் நடைமுறை ஏப்ரல் மாதத்தில் இருந்துதான் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்ததால், பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வரி வசூல் தடாலடியாக 85000 கோடி ரூபாயாக சரிந்தது.
நிதியாண்டு கணக்கு முடிவதால், வர்த்தக நிறுனங்களும், தொழில் துறையினரும், வருவாயை உயர்த்தும் நோக்கில் விற்பனையை அதிகரித்ததால் மார்ச் மாத ஜிஎஸ்டி வரி வசூல் 89,264 கோடி ரூபாயை தொட்டது. மற்றொரு சிறப்பம்சமாக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து மார்ச் மாதம் வரையிலான 9 மாத கால கட்டத்தில் ஜிஎஸ்டி வரி வசூலானது 7.41 லட்சம் கோடியை தொட்டு வசூல் சாதனை படைத்தது.
மத்திய அரசின் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில் 2018-19ம் நிதியாண்டின் தொடக்க மாதமான ஏப்ரல் மாதத்திய ஜிஎஸ்டி வரி வசூல் 1,03,458 கோடி ரூபாயை தொட்டு சாதனை படைத்தது.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வசூலில் மத்திய அரசின் வருவாயாக (CGST) 18,652 கோடி ரூபாயும், மாநில அரசின் வருவாயாக (SGST) 25,704 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த (IGST) வரி வருவாயாக (இறக்குமதி வரியான 21,246 கோடி ரூபாய் உள்பட) 50,548 கோடி ரூபாயும், இழப்பீட்டு வரியாக (இறக்குமதி செய்த வகையில் வசூலான இழப்பீட்டு வரியான 702 கோடி ரூபாய் உட்பட) 8,554 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.
ஏப்ரல் மாதத்தில் வர்த்தக நிறுவனங்களும் தொழில துறையினரும் தாக்கல் செய்த ஜிஎஸ்டி ரிட்டன் கணக்குகளின் படி, கொள்முதல் மூலம் கிடைத்த உள்ளீட்டு வரிப் பயன்பாட்டை விற்பனையில் சரிக்கட்டிய பின்பு மத்திய அரசுக்கு (CGST) நிகர ஜிஎஸ்டி வரியாக 32,493 கோடி ரூபாயும் மாநில அரசின் பங்காக (SGST) 40,257 கோடி ரூபாயும் வசூலானது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்திய கணக்கின் படி ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள மொத்த வர்த்தகர்கள் மற்றும் தொழில துறையினரின் எண்ணிக்கை 87.12 லட்சம் பேர் ஆகும். இவர்களில் சுமார் 69.5 சதவிகிதம் பேர் தாக்கல் செய்த ரிட்டன்களின் மூலம் இந்த வரி வசூல் சாதனை எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில் ஏப்ரல் மாதத்திய ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடி என்பது மிகப்பெரிய சரித்திர சாதனை என்றும் இதன்மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி பேருதவி செய்துள்ளது என்றும் ஜிஎஸ்டி வரி முறையை மேலும் எளிமையாக்கவும் கையாளவும் உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
நடப்பு 2018-19ம் நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்தே மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்திற்கு உதவும் இ-வே பில் என்னும் இணையவழி ரசீது பயன்பாடு அமல்படுத்தப்பட்டதாலும் இந்த வசூல் எட்டியுள்ளது மற்றொரு சிறப்பம்சமாகும்.