வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் - அருண் ஜெட்லி
வருமானவரி கணக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்ய தவறினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு சலுகை ரத்தாக வாய்ப்பு உள
டெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒருங்கிணைந்த மத்திய பட்ஜெட்டை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வருமானவரி கணக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்ய தவறினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
2017-18ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படாதது மாதச்சம்பளம் பெறுவோருக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது. ஆனால் வரி விதிப்பு விகிதத்தில் அருண் ஜெட்லி சலுகை வழங்கி இருக்கிறார்.
கடந்த ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் 3.7 கோடி பேர் மட்டுமே. இதில் ஆண்டு வருமானத்தை ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாக காட்டியவர்கள் 24 லட்சம் பேர் தான் என்று கூறிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இந்தியாவில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
3.7 கோடி தனி நபர்களில் வருமான வரி தாக்கல் செய்தோர் 97 லட்சம் பேர் குறைந்த வருவாய் பிரிவினர், 52 லட்சம் பேர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டுகிறார்கள். 1.72 லட்சம் பேர் மட்டுமே 50 லட்சத்துக்கு மேல் வருவாய் பெறுவதாக அறிவித்துள்ளனர் என்று கூறினார். ஆனால் வரி செலுத்துவோர் மகிழும் வகையில் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு மிக முக்கிய அறிவிப்புகள் இல்லை என்றே கூற வேண்டும்.
வரிச்சலுகை மட்டுமே
தற்போது ரூ. 2.5லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதை 5 சதவீதமாக குறைத்து இருக்கிறார்.
ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு ஏற்கனவே உள்ளது போல் 20 சதவீத வரியும், ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ள வருமானத்துக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள்
60 முதல் 80 வரையிலான மூத்த குடிமக்கள் என்றால் ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது. 80 வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டியது இல்லை. ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
பணக்காரர்களுக்கு வரி
இந்த பட்ஜெட்டில் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு ஏற்கனவே உள்ள 30 சதவீத வரியுடன் கூடுதலாக 10 சதவீத வரியும், ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 15 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்படும்.
மாத சம்பளதாரர்கள் ஏமாற்றம்
வருமான வரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஆயுள் காப்பீடு, குழந்தைகளுக்கான கல்விக்கட்டணம், தேசிய சேமிப்பு பத்திரம், வீட்டுக்கடனுக்காக செலுத்தப்படும் அசல் தொகை போன்றவற்றுக்கான கழிவு உச்சவரம்பு தற்போது ரூ. ஒன்றரை லட்சமாக இருக்கிறது. விலைவாசி உயர்வின் காரணமாக செலவினங்கள் அதிகரித்து இருப்பதால் இந்த கழிவு உச்சவரம்பை குறைந்த பட்சம் ரூ. 2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாதச் சம்பளம் பெறுவோரிடம் இருந்தது. ஆனால் இந்த உச்சவரம்பு பட்ஜெட்டில் உயர்த்தப்படாதது ஏமாற்றம் அளித்துள்ளது.
வருமான வரி படிவம்
வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவமும் எளிமையாக்கப்பட்டு இருக்கிறது. ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவம் இனி ஒரு பக்கத்தை கொண்டதாக மட்டுமே இருக்கும் என்று அருண் ஜெட்லி அறிவித்து இருக்கிறார்.
முதலீட்டு வருவாய்
ஒரு சொத்து வாங்கப்பட்ட 3 ஆண்டுகளில் விற்கப்பட்டால் அதன்மூலம் கிடைக்கும் லாபம் முதலீட்டு வருவாயாக கருதப்பட்டு அந்த தொகைக்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த 3 ஆண்டு காலவரையறை என்பது பட்ஜெட்டில் 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு இருக்கிறது. மாதம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வாடகை செலுத்துவோருக்கு 5 சதவீதம் வரி கழிவு உண்டு என்று அறிவித்துள்ள அருண் ஜெட்லி, தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து அவசர செலவுகளுக்காக 25 சதவீத தொகையை திருப்பி எடுத்தால் அதற்கு வரி கிடையாது என்றும் கூறி இருக்கிறார்.
உச்சவரம்பு
2வது வீடு வாங்கியதற்காக செலுத்தப்படும் வீட்டுக் கடனுக்கான வட்டி தொகையில் 71வது பிரிவின் கீழ் இனி ரூ.2 லட்சம் வரை மட்டுமே கழிவு சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன் இந்த உச்சவரம்பு கிடையாது.
ரூ.10 ஆயிரம் அபராதம்
வருமான வரி சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத வருவாய் மற்றும் சொத்தின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு மேல் இருந்தால், சம்பந்தப்பட்ட நபர் தாக்கல் செய்த 10 ஆண்டுகள் வரையிலான வருமான வரி கணக்குகளை வருமான வரி அதிகாரிகள் மறு ஆய்வு செய்ய முடியும் என்று அருண் ஜெட்லி அறிவித்து உள்ளார். இந்த காலவரையறை தற்போது 6 ஆண்டுகளாக உள்ளது.
அரசியல் கட்சிகள்
அரசியல் கட்சிகள் ரூ. 2,000 மட்டுமே ரொக்கமாக நன்கொடை பெற முடியும் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் அருண்ஜெட்லி. அதேநேரத்தில், டிஜிட்டல் பரிவர்த்தனை, காசோலை என வங்கிகள் மூலம் பெறப்படும் நன்கொடைகளுக்கு கட்டுப்பாடுகளோ தடைகளோ இல்லை என கூறியுள்ளார். டிசம்பருக்குள் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யாத கட்சிகள் வரிச்சலுகை பெற முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வரிச்சலுகை அந்தஸ்து ரத்து
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வருவாய்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா நன்கொடை பெறும் அரசியல் கட்சிகள் தங்களது வரவு செலவு கணக்குகளை டிசம்பர் மாத இறுதியிலேயே தாக்கல் செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அதன் வரிச்சலுகை அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு விடும்.
தாமதமாக தாக்கல்
கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சிகள் தாக்கல் செய்துள்ள கணக்குகளை கண்காணித்து வருகிறோம். இதன்படி 50 சதவீத கட்சிகள் சரியான நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல்செய்வதே இல்லை. அதாவது, சிறு கட்சிகள் பல ரிட்டர்ன் தாக்கல் செய்யாமல் விட்டு விடுகின்றனர். சில கட்சிகள் 2 அல்லது 3 ஆண்டு தாமதமாக கூட ரிட்டர்ன் தாக்கல் செய்கின்றனர். இதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் தாமதமாக தாக்கல் செய்தால் இனி செலவுக்கான அலவன்ஸ் பெற முடியாது என தெரிவித்துள்ளார்.